பட்டியலின மாணவர், பாட்டி மீது தாக்குதல் - கல்லூரி, பள்ளி மாணவர்கள் உட்பட 4 பேர் கைது @ கரூர்

பட்டியலின மாணவர், பாட்டி மீது தாக்குதல் - கல்லூரி, பள்ளி மாணவர்கள் உட்பட 4 பேர் கைது @ கரூர்
Updated on
1 min read

கரூர்: கரூர் அருகே பட்டியலின மாணவர், அவரது பாட்டியை தாக்கிய கல்லூரி, பள்ளி மாணவர்கள் உட்பட 4 பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

கரூர் மாவட்டம் ஜெகதாபியை அடுத்த அல்லாளி கவுண்டனூரைச் சேர்ந்தவர் ஜீவா (14). பட்டியலின மாணவரான இவர், தனது பெற்றோரை இழந்து பாட்டி காளியம்மாள் வீட்டில் வசித்து வருகிறார். உப்பிடமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த ஜீவா, கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளி முடிந்து அரசுப் பேருந்தில் வீடு திரும்பியுள்ளார்.

அப்போது, ஜீவாவுக்கும், புலியூரில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் பயிலும் மாணவர் ஒருவர் மற்றும் அவரது நண்பர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஜீவா, தனது தாய் மாமா சேகரிடம் கூறியதையடுத்து, அவர் அந்த மாணவர்களை கண்டித்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர் மற்றும் அவரது நண்பர்கள், அல்லாளி கவுண்டனூருக்கு கும்பலாக சென்று ஜீவாவையும், அவரது பாட்டி காளியம்மாளையும் தாக்கியுள்ளனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது பரவி வருகிறது. காயமடைந்த ஜீவா மற்றும் அவரது பாட்டி காளியம்மாள் இருவரும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து வெள்ளியணை காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், ஒரு கல்லூரி மாணவர், உதவி பெறும் பள்ளியைச் சேர்ந்த 2 மாணவர்கள் மற்றும் அவருடைய நண்பர் ஒருவர் என 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து நேற்று கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in