

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியின் தனிச் செயலாளர் எனக்கூறி மகனுக்கு கல்லூரியில் சீட்டு கேட்டு மோசடி செய்ததாக தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருப்பவர் ஆனந்த் வெங்கடேசன். இவரது நேர்முக உதவியாளராக இருப்பவர் புஷ்பலதா. இவர் உயர் நீதிமன்ற காவல் நிலையத்தில் சில தினங்களுக்கு முன்னர் புகார் ஒன்று அளித்தார்.
அதில், ‘கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி நிர்வாகிகளை தொடர்பு கொண்ட நபர் ஒருவர், நீதிபதி ஆனந்த் வெங்கடேசனின் தனிச் செயலாளர் ஸ்ரீனிவாசன் பேசுகிறேன். நிதிபதியின் மகனுக்கு உங்கள் கல்லூரியில் கம்யூட்டர் இன்ஜினியரிங் சீட்டு வேண்டும் என கேட்டுள்ளார்.
இதனால் சந்தேகம் அடைந்த கல்லூரி தரப்பினர் இது தொடர்பாக எங்களிடம் விசாரணை நடத்தினர். அப்போதுதான் நீதிபதியின் தனிச் செயலாளர் என போலியாக கூறிக் கொண்டதோடு, நீதிபதியின் மகனுக்கே சீட்டு வேண்டும் என கல்லூரியில் மோசடி செய்ய முயன்ற சம்பவம் தெரியவந்தது. எனவே, சம்பந்தப்பட்ட மோசடி நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தினர். இதில், நீதிபதி பெயரில் மோசடியில் ஈடுபட்டது சென்னை ராமாபுரத்தைச் சேர்ந்த வெங்கடேச பெருமாள் (52) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.
போலீஸாரிடம் கைது செய்யப்பட்ட வெங்கடேச பெருமாள் கூறுகையில், ‘நீதிபதியின் மகனுக்கு, நீதிபதியின் செயலாளரே பேசினால் கல்லூரியில் சீட் கிடைத்து விடும் என்ற எண்ணத்தில் இப்படி கல்லூரியை தொடர்பு கொண்டு பேசியதாகவும், எனது மகனை கேளம்பாக்கம் கல்லூரியில் சேர்த்து படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசையில் இப்படி நடந்துகொண்டதாகவும் வெங்கடேச பெருமாள் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இவர் நுகர்வோர் நீதிமன்றத்தில் நீதித்துறை அல்லாத கவுன்சிலில் இருந்ததாக போலீஸார் தெரிவித்தனர். கைதான வெங்கடேச பெருமாள் இதேபோல் வேறு ஏதேனும் மோசடியில் ஈடுபட்டுள்ளாரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.