மெரினா கடற்கரையில் காவல் வாகனம் மோதி பெண் உயிரிழப்பு

மெரினா கடற்கரையில் காவல் வாகனம் மோதி பெண் உயிரிழப்பு
Updated on
1 min read

சென்னை: அம்பத்தூர் கள்ளிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் மேரி (57). இவர் முன்னாள் முதல்வர்களின் நினைவிடங்களை சுற்றி பார்ப்பதற்காக மெரினா கடற்கரைக்கு நேற்று காலை வந்துள்ளார். பின்னர் காலை 9.40 மணியளவில் காமராஜர் சாலையை கடக்க முயன்றபோது தலைமைச் செயலகம் நோக்கி வந்த காவல்துறை வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே மேரி உயிரிழந்தார்.

தகவல் அறிந்து அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் ரத்தினவேல் பாண்டியன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடம் விரைந்து மேரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த அப்பிரிவு போலீஸார் விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை ஓட்டி வந்த காவலர் சத்தியமூர்த்தியை (28) கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதேபோல, தண்டையார்பேட்டை, நாவலன் நகரை சேர்ந்தவர் சென்னை மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் வர்ணமூர்த்தி (58). நேற்று காலை இவர் வேலைக்கு செல்வதற்கு அதே பகுதி கைலாசம் தெரு வழியாக சென்று கொண்டிருந்தார். அங்கு எதிரே வந்த லாரி இவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே வர்ணமூர்த்தி இறந்தார்.

விபத்தை ஏற்படுத்தியதாக லாரி ஓட்டுநர் திருவொற்றியூர், காலடிப்பேட்டையை சேர்ந்த வெங்கடேசன் (44) என்பவரை போலீஸார் கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in