

மதுரை: மதுரையில் ஓய்வு பெற்ற சுகாதார அலுவலரின் மனைவி, மகன், மகள் தற்கொலை செய்து கொண்டனர். வறுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டனரா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை கோமதிபுரம் பகுதியிலுள்ள அன்புநகர் ராஜன் தெருவைச் சேர்ந்தவர் பாண்டியன். இவர் சுகாதாரத் துறையில் அலுவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி வாசுகி (67). இவர்களது மகன் கோதண்டபாணி (47), மகள் உமாதேவி (44) ஆகியோருக்கு திருமணம் ஆகவில்லை. கருத்து வேறுபாடு காரணமாக 15 ஆண்டுகளாக பாண்டியன் பிரிந்து வாழ்கிறார்.
வாசுகி தனது மகன், மகளுடன் சொந்த வீட்டில் வசித்தார். இந்நிலையில் 3 நாட்களுக்கு மேலாக வாசுகியின் வீடு திறக்கப்படாமல் இருந்தது. சந்தேகமடைந்த அப்பகுதியினர் அண்ணாநகர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். காவல் ஆய்வாளர் கோபிநாத் உள்ளிட்ட போலீஸார், வீட்டின் கதவை திறந்து பார்த்தபோது வாசுகி, உமாதேவி ஆகியோர் அடுத்தடுத்து இறந்து கிடந்தனர்.
கோதண்டபாணி தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தார். மூவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவ மனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். பாண்டியனை விட்டு பிரிந்த வாசுகி, தனது மகன், மகளுடன் வறுமையில் வாழ்ந்துள்ளார். வீட்டுக்கு மின் கட்டணம் கூட செலுத்த வசதியின்றி தவித்ததாகக் கூறப்படுகிறது.
இது போன்ற சூழலில் தற்கொலை செய்ய முடிவெடுத்து, 3 பேரும் இறந்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக் கின்றனர். எனினும், வேறு ஏதேனும் காரணம் உண்டா என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.