முதல்வரிடம் பாராட்டு பெற்ற நரிக்குறவ பெண் கொலை முயற்சி வழக்கில் கைது

அஸ்வினி
அஸ்வினி
Updated on
1 min read

மாமல்லபுரம்: முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பாராட்டு பெற்ற அஸ்வினி என்ற நரிக்குறவ பெண் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருக்கழுகுன்றம் அருகே உள்ள கொத்திமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட எம்ஜிஆர் நகர் பகுதியில் வசிக்கும் நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த விஜி என்பவரின் மனைவி நதியா(38). இவர், மாமல்லபுரம் பகுதியில் கடற்கரை செல்லும் வழியில் கடந்த பல ஆண்டுகளாக தரைக்கடை அமைத்து மணிகளால் தயாரிக்கப்பட்ட அணிகலன்கள் விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரி பகுதியில் வசிக்கும் நரிக்குற சமுதாயத்தை சேர்ந்த சேகர் என்பவரின் மகள் அஸ்வினி, நதியாவிடம் கடற்கரைப் பகுதியில் கடை அமைக்க கூடாது என அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை இதே போல் இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது ஆத்திரமடைந்த அஸ்வினி, நதியாவை கத்தியால் தாக்கியதாகவும், இதில் அவர் காயமடைந்ததாகவும் தெரிகிறது.இதையடுத்து, அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இதுதொடர்பான புகாரின்பேரில், மாமல்லபுரம் போலீஸார் கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து அஸ்வினியை கைது செய்தனர். பின்னர், திருக்கழுகுன்றம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

நரிக்குறவ சமுதாய மக்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அஸ்வினி முன்பு கோரிக்கை விடுத்திருந்தார். இதன் பேரில், முதல்வர் அப்பகுதிக்கு சென்று அஸ்வினியை பாராட்டி கடைகள் ஒதுக்கவும் உத்தரவிட்டார். இந்நிலையில், கொலை முயற்சி வழக்கில் அஸ்வினி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in