

சென்னை: ஆன்லைனில் பகுதி நேர வேலைஎனக் கூறி ரூ.1.6 கோடி மோசடி செய்ததாக உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை பெருங்குடியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். தனது குழந்தையை கவனிப்பதற்காக தற்போது நீண்ட விடுப்பில்உள்ளார். இந்நிலையில், அவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில், ``ஆன்லைனில் பகுதி நேர வேலை தருவதாக வாட்ஸ்-அப்மற்றும் டெலிகிராம் மூலம் நபர் ஒருவர் தொடர்பு கொண்டார். அதைநம்பி அவரது பல்வேறு வங்கிக்கணக்குகளுக்கு ரூ.66 லட்சத்து22 ஆயிரத்து 450-ஐ அனுப்பி வைத்தேன். ஆனால், நான் செலுத்திய தொகை எதுவும் எனக்குத் திரும்ப வரவில்லை. எனவே, மோசடி நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்" என்று கூறியிருந்தார்.
அதன்பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் இளையராஜா, எஸ் ஐராஜீவ் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர்.
முதல்கட்டமாக மோசடி நபரின் வங்கிக் கணக்குகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய செல்போன் எண்களை வங்கியில் இருந்து சேகரித்து போலீஸார் விசாரணை நடத்தினர். அதில், வங்கிக்கணக்கு மணிஷ்குமார் என்ற பெயரில் இருந்ததும், அதை அவரது மகன் ரிதம் சவ்லா பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது.
குற்றவாளியை உடனடியாக கைது செய்ய சென்னை காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில், தனிப்படை போலீஸார் உத்தர பிரதேச மாநில ரேபரேலி சென்று விசாரணை நடத்தினர். அப்போது, அங்குள்ள குருநானக் நகரில் பதுங்கி இருந்த கல்லூரி மாணவரான ரிதம் சவ்லாவை (20)போலீஸார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 செல்போன்கள், ஒரு லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டன.
அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், ஆன்லைனில் பகுதி நேர வேலை மோசடியில் ஈடுபட்டு பொதுமக்களிடம் இருந்து பெற்ற ரூ.1 கோடியே 60 லட்சம் பணத்தை கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்திருப்பதை ஒப்புக்கொண்டார். சென்னைக்கு அழைத்துவரப்பட்ட ரிதம் சவ்லா நேற்று எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கைது செய்யப்பட்டுள்ள ரிதம்சவ்லா மீது ஏற்கெனவே மும்பை தானேவில் வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆன்லைனில் பகுதிநேர வேலைமோசடி, டெலிகிராம் டாஸ்க் ஸ்கேம்தொடர்பான முதலீடுகள் குறித்தும்பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என காவல்ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார்.