சென்னை | சாப்பிட்டதற்கு பணம் கேட்டதால் ஆத்திரம்: உணவகத்தை சூறையாடிய சகோதரர்கள் கைது

சென்னை | சாப்பிட்டதற்கு பணம் கேட்டதால் ஆத்திரம்: உணவகத்தை சூறையாடிய சகோதரர்கள் கைது
Updated on
1 min read

சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டை ஜே.பி.கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் அதே பகுதியில் துரித உணவகம் (பாஸ்ட்புட்)கடை நடத்தி வருகிறார். இவரதுகடைக்கு கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த சகோதரர்களான தினேஷ், அஜித் ஆகியோர் வந்துஉணவருந்தி உள்ளனர். பின்னர்அவர்கள் சாப்பிட்டதற்கான பணத்தை கொடுக்காமல் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.

இதனை கேட்டதோடு, ராஜேந்திரன் கண்டிக்கவும் செய்தாராம். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு சிறிது நேரத்தில் தகராறாக மாறியது. இதையடுத்து தினேசும், அஜித்தும் அங்கிருந்து வெளியேறினர். சிறிது நேரத்தில் கூட்டாளிகளுடன் வந்த அவர்கள் உணவகத்துக்குள் புகுந்து உருட்டு கட்டையால் அங்கிருந்த பொருட்களை சூறையாடியதோடு, ஊழியர்களையும் சரமாரியாக தாக்கினர்.

இதைக் கண்டு, உணவருந்திக் கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் அங்கிருந்து பதறியபடி வெளியேறினர். இதுகுறித்து தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் உணவகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். தாக்குதலில் ஈடுபட்ட சகோதரர்களை கைது செய்தனர். தொடர்ந்துவிசாரணை நடக்கிறது.

இதற்கிடையில்,உணவகம் சூறையாடப்பட்டது மற்றும் ஊழியர்கள் தாக்கப்படும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in