சென்னை | வங்கி டெபாசிட் இயந்திரத்தில் பணம் செலுத்த சென்றபோது இளைஞரை தாக்கி ரூ.8 லட்சம் வழிப்பறி: கொள்ளையர்கள் 2 பேர் கைது

சென்னை | வங்கி டெபாசிட் இயந்திரத்தில் பணம் செலுத்த சென்றபோது இளைஞரை தாக்கி ரூ.8 லட்சம் வழிப்பறி: கொள்ளையர்கள் 2 பேர் கைது
Updated on
1 min read

சென்னை: வங்கி டெபாசிட் இயந்திரத்தில் பணம் செலுத்த சென்ற இளைஞரை தாக்கி வழிப்பறி செய்த வழக்கில் பிரபல கொள்ளையர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் முகமது தமிம் அலி (28). இவர் கடந்த மாதம் 31-ம் தேதி இரவு, தனது நண்பருடன் இரு சக்கர வாகனத்தில் ராயபுரத்தில் உள்ள வங்கி டெபாசிட் இயந்திரத்தில் பணம் செலுத்த ரூ.8 லட்சத்துடன் சென்றார்.

அதே பகுதி எம்.எஸ். கோயில் தெருவில் சென்று கொண்டிருந்தபோது 2 இருசக்கர வாகனங்களில் வந்த 5 பேர் கும்பல் தமிம் அலியை கத்தியால் தாக்கி, அவர் வைத்திருந்த பணத்தை பறித்துக் கொண்டு தப்பியது.

அதிர்ச்சி அடைந்த தமிம் அலி இதுகுறித்து ராயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். முதல்கட்டமாக சம்பவ இடத்தின் அருகே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதன் அடிப்படையில் தமிம் அலியிடம் வழிப்பறி செய்ததாக கொடுங்கையூர், சந்திரசேகர் நகரைச் சேர்ந்தவெங்கடேஷ் என்ற கருக்காவெங்கடேஷ் (35), கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த கர்ணா (24) ஆகிய இருவரையும் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அவர்களது கூட்டாளிகள் 3 பேரை தனிப்படை அமைத்து போலீஸார் தேடி வருகின்றனர்.

தலா 8 குற்ற வழக்குகள்: விசாரணையில் கைதான இருவர் மீதும் தலா 8 குற்றவழக்குகள் உள்ளது தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in