

தருமபுரி: தருமபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே மாயமான சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தருமபுரி மாவட்டம் புழுதிகரை அடுத்த காட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொக்லைன் ஆபரேட்டர் ஆதிமூலம்(30). இவர் மனைவி சுதா(27). இவர்களின் 7 வயது மகன் கடத்தூர் பகுதியிலுள்ள தனியார் பள்ளி ஒன்றில் இவர் 2-ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 16-ம் தேதி மாலை வீட்டுக்கு அருகேயுள்ள அரசு தொடக்கப் பள்ளி பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மாயமானார். எனவே, சிறுவனின் பெற்றோரும், உறவினரும் தேடிப்பார்த்தும் கிடைக்காத நிலையில் கிருஷ்ணாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், அப்பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் சிறுவன் சடலமாகக் கிடப்பது நேற்று (ஜூலை 18) மாலை தெரிய வந்தது. கழுத்துப் பகுதியில் காயங்களுடன் பிளாஸ்டிக் உறையில் சுற்றப்பட்ட நிலையில் தொட்டியில் சிறுவனின் சடலம் கிடந்தது. கிருஷ்ணாபுரம் போலீஸார் தருமபுரி தீயணைப்பு துறையினரை வரவழைத்து சிறுவனின் சடலத்தை மீட்டனர்.
முன்விரோதத்தில் சிறுவன் கொலை செய்யப்பட்டிருப்பது போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக இளைஞர் ஒருவரை பிடித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.