மதுரை பாலமேடு அருகே அதிமுக கவுன்சிலர் கொலை

சவுந்திரபாண்டியன்
சவுந்திரபாண்டியன்
Updated on
1 min read

மதுரை: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகிலுள்ள மாவூத்தம்பட்டியைச் சேர்ந்தவர் காமு. இவரது மகன் சவுந்திரபாண்டியன் (50). இவர் அம்மைய நாயக்கனூர் பேரூராட்சி 10-வது வார்டு அதிமுக கவுன்சிலர்.

இவரது மகளை மதுரை மாவட்டம், லிங்கவாடியில் திருமணம் செய்து கொடுத்துள்ளார். தனது மகளைப் பார்க்க, மோட்டார் சைக்கிளில் நேற்று லிங்கவாடிக்கு சென்றுவிட்டு ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். பாலமேடு அருகே லிங்கவாடி- மாணிக்கம்பட்டி சாலையில் சென்றபோது, நேற்று காலை 11 மணியளவில் தனியார் பள்ளி அருகே வெட்டுக் காயங்களுடன் சவுந்திரபாண்டியன் இறந்து கிடந்தார். அவரது மோட்டார் சைக்கிள் அருகே கிடந்தது.

இதுபற்றி தகவல் அறிந்த பாலமேடு போலீஸார் அவரது உடலைக் கைப்பற்றினர். சம்பவம் நடந்த இடத்தில் ஊமச்சிகுளம் டிஎஸ்பி பாலச்சந்திரன் விசாரணை மேற்கொண்டார்.

சவுந்திரபாண்டியன் வட்டிக்குப் பணம் கொடுத்து வந்ததாகவும், இவர் மீது ஏற்கெனவே கொலை வழக்கு நிலுவையில் இருப்பதாகவும் போலீஸார் தெரிவிக்கின்றனர். அந்த முன்விரோதத்தில் கொலை செய்யப்பட்டாரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in