மறைமலைநகரில் வன்னியர் சங்க பிரமுகர் கொலை வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

மறைமலைநகரில் வன்னியர் சங்க பிரமுகர் கொலை வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
Updated on
1 min read

மறைமலைநகர்: மறைமலைநகரில் வன்னியர் சங்க பிரமுகர் கொலை வழக்கில் கைதான 7 பேரில் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதற்கான உத்தரவை தாம்பரம் மாநகர் காவல் ஆணையர் அமல்ராஜ் பிறப்பித்தார்.

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் காளிதாஸ் (34). செங்கல்பட்டு மத்திய மாவட்ட வன்னியர் சங்கத் தலைவராக இருந்தார். இந்நிலையில் கடந்த 12-ம் தேதி மறைமலைநகர் பகுதியில் சாலையோர கடையில் டீ குடித்து கொண்டிருந்தபோது அங்கு காரில் வந்த 5 பேர் அவரை வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.

இதில் காளிதாஸ் அதே இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த மறைமலைநகர் போலீஸார் விரைந்து வந்து உயிரிழந்த காளிதாஸின் உடலை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொலையான காளிதாஸ் மீது ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு கட்ட பஞ்சாயத்து ஒன்றுக்கு சென்றதாகவும், அந்த பகையில் இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்தனர்.

இந்த சம்பவத்தை கண்டித்தும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் பாமக தலைவர் அன்புமணி தலைமையில் அக்கட்சியினரும் வன்னியர் சங்கத்தினரும் அண்மையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் கொலையில் தொடர்புடைய 7 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் முக்கிய குற்றவாளிகளான மறைமலைநகர் பகுதியை சேர்ந்த சபரி என்ற சபரிநாதன், வெங்கடேஷ், பார்த்திபன், சிங்கப்பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்த பாலாஜி ஆகிய 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இதன்படி இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

இதற்கான உத்தரவை மறைமலைநகர் போலீஸார் புழல் சிறையில் உள்ள அதிகாரிகளிடம் வழங்கினர். குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சபரி உள்ளிட்ட 4 பேர் மீதும் ஏற்கெனவே கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in