சென்னை | போலீஸ் விசாரணைக்கு சென்று திரும்பிய ரவுடி உயிரிழப்பு

சென்னை | போலீஸ் விசாரணைக்கு சென்று திரும்பிய ரவுடி உயிரிழப்பு
Updated on
1 min read

சென்னை: சென்னை எம்ஜிஆர் நகர், பம்மல் நல்லதம்பி தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீதர்(25). இவர் சென்னை மாநகராட்சியில் குப்பை அள்ளும் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த ஒரு வாரத்துக்கு முன் இவரது வீட்டின்அருகே வசிக்கும் விஜயலட்சுமி என்பவரது வீட்டில் நகைகள் திருடப்பட்டன.

எம்ஜிஆர் நகர் போலீஸார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வுசெய்து சந்தேகத்தின் அடிப்படையில் ஸ்ரீதரை நேரில் விசாரணைக்கு வரும்படி அழைத்துள்ளனர்.

இதையடுத்து, ஸ்ரீதர் 2 நாட்கள் தலைமறைவாகி விட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர், நேற்று முன்தினம் அவர் எம்ஜிஆர் நகர் காவல் நிலையம் சென்றுள்ளார். அவரிடம் போலீஸார் விசாரித்துள்ளனர். மீண்டும் நாளை வரும்படி அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில், ஸ்ரீதர் நேற்று மதியம் மனைவி மஞ்சுவுடன் காவல் நிலையம் சென்றுள்ளார். அவரிடம் போலீஸார் விசாரித்துள்ளனர். பின்னர், அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

வீட்டுக்குச் சென்ற பிறகு அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. நெஞ்சு எரிச்சலாக இருப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் அவரை கே.கே.நகர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர் இறந்துள்ளார். விசாரணை என்ற பெயரில் போலீஸார் தாக்கியதால்தான் ஸ்ரீதர் இறந்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஸ்ரீதர் மீது பல குற்ற வழக்குகள் உள்ளன. அவர் `பி' பிரிவு ரவுடி பட்டியலில் உள்ளார். திருட்டு விவகாரம் தொடர்பாக விசாரணை மட்டுமே நடத்தினோம். அவரை தாக்கவில்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in