

சென்னை: சென்னை வில்லிவாக்கம் திருவேங்கடம் பகுதியைச் சேர்ந்தவர் அப்பு. இவர் மீது அடிதடி, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
அப்பு நேற்று முன்தினம் இரவு அவரது நண்பர்களுடன் வீட்டின் அருகில் உட்கார்ந்து மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது அப்புவுக்கும், அவரது நண்பர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் அனைவரும் அங்கிருந்து சென்றுவிட்டனர். நேற்று காலை அப்பு தனது வீட்டின் அருகே நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த அவரது நண்பர்கள், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, அப்புவை சரமாரியாகத் தாக்கினர். இதில் சம்பவ இடத்திலேயே அப்பு இறந்தார்.
தகவல் அறிந்து வந்த வில்லிவாக்கம் போலீஸார், அப்பு உடலை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து 3 தனிப்படைகளை அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.