ஜிஎஸ்டி அதிகாரிகளை காரில் கடத்திய 4 பேர் கைது

ஜிஎஸ்டி அதிகாரிகளை காரில் கடத்திய 4 பேர் கைது
Updated on
1 min read

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் சோதனைக்குச் சென்ற ஜிஎஸ்டி அதிகாரிகள் நேற்று காரில் கடத்தப்பட்டனர். போலீஸார் அவர்களை மீட்டு, 4 பேரை கைது செய்துள்ளனர்.

தெலங்கானா தலைநகர் ஹைதராபாத், சரூர் நகரில் உள்ள சில கடை உரிமையாளர்கள் சரிவர ஜிஎஸ்டி செலுத்துவதில்லை என புகார்கள் எழுந்தன. இந்த ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு தொடர்பாக சரூர் நகரில் உள்ள சாய் கிருஷ்ணா நகருக்கு ஜிஎஸ்டி புலனாய்வு துறையின் மணிசர்மா, ஆனந்த் என்ற இரு அதிகாரிகள் நேற்று சென்றனர். இவர்கள் அங்குள்ள 2 இரும்பு கடைகளில் கணக்குகளை தணிக்கை செய்ய முயன்றனர். அப்போது சிலர் அவர்களின் அடையாள அட்டைகளை பறித்துக் கொண்டு அவர்களை தாக்கினர். மேலும் இருவரையும் ஒரு காரில் கடத்திச் சென்றனர். பிறகு இவர்களை விடுவிக்க ரூ.5 லட்சம் தருமாறு கேட்டுள்ளனர்.

இது தொடர்பாக மணிசர்மா ரகசியமாக போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீஸார் மணி சர்மாவின் செல்போன் சிக்னல் மூலம் அவர்களை பின்தொடர்ந்தனர். ராஜீவ் கூட்டு ரோடு அருகே அந்த காரை மடக்கிப் பிடித்து 2 அதிகாரிகளையும் விடுவித்தனர். அவர்களை கடத்திச் சென்ற 4 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in