சென்னை | கொலை வழக்கில் தலைமை காவலர் கைது

சென்னை | கொலை வழக்கில் தலைமை காவலர் கைது
Updated on
1 min read

சென்னை: மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்தவர் பாபுஜி (50). இவர் சென்னை நொளம்பூர் எஸ்என்பி கார்டன் பகுதியைச் சேர்ந்த வெங்கட்ராமன் என்பவர் நடத்தி வந்தநிதி நிறுவனத்தில் பணம் வசூலிக்கும் ஊழியராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் பாபுஜி, அந்த நிறுவனத்தில் பணத்தைக் கையாடல் செய்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் வெங்கட்ராமனுக்கும், பாபுஜிக்கும் இடையே விரோதம் ஏற்பட்டது. இதற்கிடையே வெங்கட்ராமன் தரப்பினர் கடந்த பிப். 23-ம் தேதி கோயம்பேடு பேருந்து நிலையத்தின் எதிரே நின்று கொண்டிருந்த பாபுஜியை கடத்தி சென்று சித்ரவதை செய்து கொலை செய்தனர். பின்னர்பாபுஜி சடலத்தை கொளப்பாக்கத்தில் உள்ள ஒரு குப்பை மேட்டில் எரித்தனர்.

இது தொடர்பாக கோயம்பேடு சிஎம்பிடி காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து, வெங்கட்ராமன், கோபாலகிருஷ்ணன் உட்பட 8 பேரைக் கைது செய்தனர். இதற்கிடையே இந்த வழக்கில் தொடர்புடைய பூந்தமல்லி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரியும் மதுரவாயல் கார்த்திகேயன் நகரைச் சேர்ந்த அமல்ராஜ் (44) என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

விசாரணையில், வெங்கட்ராமனும், அமல்ராஜும் நெருங்கிய நண்பர்கள் என்பதும், அதன் அடிப்படையில் அமல்ராஜ் தனது நண்பரான வெங்கட்ராமனுக்கு பாபுஜி கொலை வழக்கில் உதவியிருப்பதும் தெரியவந்தது. இது தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in