திருப்பத்தூர் | ஐடி ஊழியரிடம் ரூ.90 லட்சம் நூதன மோசடி
திருப்பத்தூர்: திருப்பத்தூர் அடுத்த காமராஜர் நகரைச் சேர்ந்தவர் ராஜேஷ்(30). இவர், பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், கடந்த மே மாதம் இவரது கைபேசிக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்தது.
அதில், பகுதி நேர வேலையில் ஈடுபட்டு பல லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது.மேலும், அத்துடன் ஒரு லிங்க்கும் அனுப்பப்பட்டிருந்தது. உடனே ராஜேஷ் அந்த லிங்க்கை தொட்டு இனையதளத்துக்குள் சென்றார். அங்கு, தங்கள் நிறுவனம் தரப்பில் கொடுக்கும் ஒவ்வொரு 'டாஸ்க்'கையும் முடித்தால் அதற்கேற்றவாறு பணம் உங்கள் வங்கி கணக்குக்கு வரும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, அவரும் சில இலக்குகளை முடித்தபோது, அவருக்கு ரூ. 2 லட்சம் வரைகிடைத்தது. இதனால் மகிழ்ச்சியடைந்த ராஜேஷ், அதிக பணம் சம்பாதிக்கும் ஆசையில் தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.90 லட்சம் செலுத்தினார். அடுத்த சிறிது நேரத்தில் அந்த லிங்க் துண்டிக்கப்பட்டது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ராஜேஷ் அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து திருப்பத்தூர் எஸ்.பி., ஆல்பர்ட் ஜானிடம் ராஜேஷ் புகார் அளித்தார். அவரது உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
