

விருதுநகர்: கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தை 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் இன்று அனுமதியளித்தது.
தனது கூட்டாளியான விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்த செந்தில் (47) என்பவரை சுட்டு கொலை செய்த வழக்கில் பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டார். அருப்புக்கோட்டை ஏ.எஸ்.பி. கருண்காரட் தலைமையிலான தனிப்படை போலீஸார் வரிச்சியூர் செல்வத்தை கைது செய்தனர். 2 நாட்கள் விசாரணைக்கு பிறகு சாத்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு மதுரை மத்திய சிறையில் வரிச்சியூர் செல்வம் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், அவரை 7 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரி விருதுநகரில் உள்ள முதலாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் அருப்புக்கோட்டை ஏ.எஸ்.பி. கருண்காரட் கடந்த 23ம் தேதி மனு தாக்கல் செய்தார். மேலும், செல்வத்தை கொலை செய்து அவரது உடலை சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு கொண்டு சென்ற காரையும் தனிப்படை போலீஸார் பறிமுதல் செய்தனர். அந்த கார் நீதிமன்றத்தில் தனிப்படை போலீஸாரால் ஒப்படைக்கப்பட்டது.
அப்போது, இந்த மனு மீதான விசாரணை 26ம் தேதி (இன்று) நடைபெறும் என்று நீதித்துறை நடுநர் கவிதா அறிவித்தார். மேலும், வரிச்சியூர் செல்வத்தை நீதிமன்றத்தில் அப்போது ஆஜர்படுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், போலீஸ் காவலில் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை விருதுநகரில் உள்ள முதலாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் இன்று நடைபெற்றது. அப்போது, மதுரை மத்திய சிறையிலிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்டு வரிச்சியூர் செல்வம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
போலீஸார் 7 நாள் காவலில் விசாரிக்க அனுமதி கோரிய நிலையில், வரிச்சியூர் செல்வத்தை 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதியளித்தும் ஜூலை 1ம் தேதி வரிச்சியூர் செல்வத்தை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நீதித்துறை நடுவர் கவிதா உத்தரவிட்டார்.
அதையடுத்து, வரிச்சியூர் செல்வத்தை அருப்புக்கோட்டை ஏ.எஸ்.பி. தலைமையிலான தனிப்படை போலீஸார் பலத்த பாதுகாப்புடன் விசாரணைக்காக அருப்புக்கோட்டை அழைத்துச் சென்றனர்.