ரூ.2 கோடி மதிப்புள்ள செம்மரக் கட்டைகள் பறிமுதல் - 3 மாநிலத்தைச் சேர்ந்த 9 பேர் கைது

ரூ.2 கோடி மதிப்புள்ள செம்மரக் கட்டைகள் பறிமுதல் - 3 மாநிலத்தைச் சேர்ந்த 9 பேர் கைது
Updated on
1 min read

திருப்பதி: திருப்பதி அருகே கார்களில் ரூ.2 கோடி மதிப்பிலான செம்மரக் கட்டைகளை கடத்தியதாக தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரள மாநிலத்தை சேர்ந்த 9 பேரை திருப்பதி போலீஸார் நேற்று கைது செய்தனர்.

திருப்பதி எஸ்.பி. பரமேஸ்வர் ரெட்டி உத்தரவின்பேரில் திருப்பதி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு, கர்நாடக எல்லைகளில் 24 மணி நேரமும் போலீஸார் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சந்திரகிரி தொகுதிக்குட்பட்ட எர்ரவாரி பாளையம் பகுதி வழியாக பெருமளவில் செம்மரங்கள் கடத்தப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் வந்தது.

அதைத்தொடர்ந்து போலீஸார் அப்பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த கார்களில் சோதனையிட முயன்றபோது, அதில் இருந்தவர்கள் தப்பி ஓடமுயன்றனர். அவர்களை போலீஸார் மடக்கிப் பிடித்து விசாரித்ததில் அவர்கள் சேஷாசலம் வனப்பகுதியிலிருந்து செம்மரங்களை வெட்டி கடத்துவது தெரியவந்தது.

இதையடுத்து தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களை சேர்ந்த 9 பேரையும் போலீஸார் கைது செய்தனர். இவர்கள் கடத்திச் சென்ற ரூ.2 கோடி செம்மரக் கட்டைகள், 4 கார்கள், ஒரு பைக்கை பறிமுதல் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in