திமுக கவுன்சிலர் காரில் கடத்தல் - விசிக பிரமுகர்கள் 4 பேர் கைது

திமுக கவுன்சிலர் காரில் கடத்தல் - விசிக பிரமுகர்கள் 4 பேர் கைது
Updated on
1 min read

தென்காசி: தென்காசி மாவட்டம், கடையநல்லூரைச் சேர்ந்தவர் அப்துல் வகாப். கடையநல்லூர் நகராட்சி 6-வது வார்டு திமுக கவுன்சிலரான இவர், தன்னை விடுதலை
சிறுத்தை கட்சியை சேர்ந்தவர்கள் காரில் கடத்திச் சென்று பணம் கேட்டு மிரட்டியதாக கடையநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர். துபாயில் வேலை பார்த்து வரும் கடையநல்லூரைச் சேர்ந்த சேக் உதுமான் என்பவரிடம் வீட்டுமனை வாங்கி தருவதாகக் கூறி கவுன்சிலர் அப்துல் வகாப் ரூ.52 லட்சம் வாங்கியதாகவும், ஆனால் அவர் வீட்டுமனையும் கொடுக்காமல், பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால், விசிகவினரிடம் பேசி, அப்துல் வகாப்பிடம் இருந்து பணத்தை வாங்கித் தருமாறு சேக் உதுமான் கூறியுள்ளார். இதையடுத்து, அப்துல் வகாப் அச்சம்பட்டி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, காரில் வந்த விசிக மாவட்ட செய்தி தொடர்பாளர் சந்திரன் (36), தென்காசி தொகுதி செயலாளர் செல்வம் (42), செங்கோட்டை ஒன்றிய துணை
செயலாளர் விவேக்(30), செங்கோட்டை ஒன்றிய நிர்வாகி இளையராஜா(34) உள்ளிட்டோர் அப்துல் வகாப்பை காரில் கடத்திச் சென்று மிரட்டியுள்ளனர்.

அவர்களிடம் இருந்து தப்பிய கவுன்சிலர் அப்துல் வகாப், கடையநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கடத்தலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சிப் பிரமுகர்கள் 4 பேரை கைது செய்த போலீஸார், மேலும் 2 பேரைத் தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in