

மதுரை: பெற்றோர் மது அருந்திவிட்டு துன்புறுத்துவதாக 9 வயது சிறுமி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
மதுரை அவனியாபுரம் பெரியசாமி நகர் பகுதியில் வசிக்கும் தம்பதிக்கு 9 வயதில் மகள் உள்ளார். இவர் 4-ம் வகுப்பு படிக்கிறார். இவரது பெற்றோர் மது அருந்திவிட்டு இரவில் அச்சிறுமியை வெளியே துரத்தியதாகத் தெரிகிறது. இதனால் அச்சமடைந்த அச்சிறுமி, தனது தோழி வீட்டில் தங்கி இருந்தார்.
நேற்று முன்தினம் இரவும் இதுபோல பெற்றோர் துன்புறுத்தி உள்ளனர். இதையடுத்து நேற்று காலை அவனியாபுரம் காவல் நிலையத்தில் அச்சிறுமி தஞ்சம் அடைந்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உதவி செய்யவும், பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கவும் ஆட்சியர் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து, மதுரை குழந்தைகள் நல பாதுகாப்புக் குழு நிர்வாகிகள் ஷோபனா, டயானா உள்ளிட்டோர் அச்சிறுமியிடம் விசாரித்தனர். இது குறித்து புகாரின் பேரில், அவனியாபுரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.