பாளை சிறையில் அடைக்கப்பட்டு உயிரிழந்தவர் உடலில் 7 காயம் இருந்ததாக புகார்

தங்கசாமி
தங்கசாமி
Updated on
1 min read

தென்காசி: தென்காசி மாவட்டம் புளியங்குடியைச் சேர்ந்த மாடசாமி என்பவரது மகன் தங்கசாமி (26). இவர், சட்டவிரோதமாக மது விற்ற வழக்கில் கடந்த 11-ம் தேதி புளியங்குடி போலீஸாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலின் பேரில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், கடந்த 14-ம் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்ட தங்கசாமி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். தங்கசாமி மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, அவரது உறவினர்கள் புளியங்குடியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போலீஸ் தாக்குதலில் அவர் இறந்து விட்டதாகவும், இது தொடர்பாக காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் தங்கசாமியின் உடலை பெற உறவினர்கள் மறுத்து வருகின்றனர். இந்நிலையில், தங்கசாமி உடலில் 7 இடங்களில் காயங்கள் இருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் புகார் கூறுகின்றனர்.

இது குறித்து தென்காசி எஸ்.பி.சாம்சனிடம் கேட்டபோது, “தங்கசாமிக்கு காவல் நிலையத்தில் வைத்து எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பதற்கு முன்பு வரை, அவர் உடலில் எந்த காயமும் இல்லை. இதுதொடர்பாக மருத்துவச் சான்றிதழ் பெறப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்” என்றார்.

5 நாளாக உடலை வாங்க மறுப்பு: இதற்கிடையே போலீஸார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி, தங்கசாமியின் உறவினர்கள் நேற்று 5-வது நாளாக அவரது உடலை பெற மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in