

கோவை: கோவை சிங்கா நல்லுார் உப்பிலிபாளையத்தை சேர்ந்தவர் லத்திகா லட்சுமி (29). இவர் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் வர்த்தகம் செய்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன் அவரது வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் பகுதி நேர வேலையாக யூ டியூப் வீடியோக்களை லைக் செய்வதன் மூலம் அதிக அளவில் பணம் சம்பாதிக்கலாம் என கூறப்பட்டிருந்தது. இதையடுத்து, லத்திகா லட்சுமி அதில் குறிப்பிடப்பட்டிருந்த டெலிகிராம் குரூப்பில் இணைந்தார்.
பின் அவர் சிறிய அளவில் பணத்தை முதலீடு செய்து டாஸ்க் செய்து வந்தார். அவருக்கு ரூ.4 ஆயிரம் லாபம் கிடைத்தது. இதை நம்பி லத்திகா லட்சுமி பல்வேறு தவணைகளாக ரூ.22 லட்சத்தை முதலீடு செய்தார். அதன் பின் அவருக்கு எந்த பணமும் வரவில்லை. புகாரின் பேரில் மாநகர சைபர் கிரைம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.