

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் கடந்த 2021-ம் ஆண்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த சமயத்தில் சாராயம் காய்ச்சிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த தகவல் நாளிதழ்களில் வெளியாகி இருந்தது.
இந்த செய்தியை தவறாக சித்தரித்து 5 திமுகவினர் சாராயம் காய்ச்சிய போது கைது என புகைப்படத்தை மார்பிங் செய்து மாற்றி, கடந்த 5 நாட்களுக்கு முன்னர் தனது சமூக வலைதள பக்கத்தில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சரவணபிரசாத் (52) என்பவர் பகிர்ந்திருந்தார்.
இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்லடம் திமுக இளைஞர் அணி அமைப்பாளர் பாலசுப்பிரமணியம் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் திருப்பூர் சைபர் கிரைம் போலீஸார் விசாரித்தனர். அதில், சரவணபிரசாத், செய்தியை திரித்து மார்பிங் முறையில் திமுக மீது அவதூறு பரப்பும் நோக்கில் பொய்யான செய்தியை பதிவிட்டது தெரியவந்தது. இதையடுத்து கோவையில் இருந்த சரவணபிரசாத்தை திருப்பூர் சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர்.