குடியாத்தத்தில் இரவு காவலாளி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தவர் கைது

ஷோபன் பாபு.
ஷோபன் பாபு.
Updated on
1 min read

குடியாத்தம்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் தரணம்பேட்டை பகுதியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் கிளை அலுவலகம் உள்ளது. இங்கு, தங்கம் நகர் பகுதியைச் சேர்ந்த பாபு (46) என்பவர் இரவு காவலாளியாக பணியாற்றி வருகிறார்.

பாதுகாப்பு பணியின்போது இரவு நேரத்தில் வங்கிக்கு வெளியே அவர் படுத்து உறங்குவது வழக்கம். வழக்கம்போல் வங்கிக்கு வெளியே கொசுவலை கட்டிக்கொண்டு பாபு நேற்று முன்தினம் இரவு உறங்கி யுள்ளார். நள்ளிரவில் அவருக்கு அருகில் வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென கொசுவலையின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார்.

இதில், கொசுவலை மளமளவென தீப்பிடித்து எரிந்தது. உறங்கிக்கொண்டிருந்த பாபு அலறியடித்து ஓடினார். தீ வைத்த நபரும் அங்கிருந்து தப்பினார். இதில், அதிர்ஷ்டவசமாக தீக்காயங்கள் எதுவும் இல்லாமல் பாபு உயிர் தப்பினார். இது குறித்த தகவலின்பேரில் துணை காவல் கண்காணிப்பாளர் ராம மூர்த்தி, நகர காவல் ஆய்வாளர் லட்சுமி ஆகியோர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

மேலும், அங்கிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணையை தொடங்கினர். அதில், காவலாளி மீது பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்றது குடியாத்தம் கட்டபொம்மன் தெருவைச் சேர்ந்த ஷோபன்பாபு (40) என்பதும், அவர் மீது குடியாத்தம் நகர காவல் நிலையம் உள்ளிட்ட சில காவல் நிலையங்களில் இரு சக்கர வாகன திருட்டு, வீடு புகுந்து திருடிய வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

தலைமறைவாக இருந்த அவரை காவல் துறையினர் நேற்று பிற்பகல் பிடித்து விசாரித்தனர். அப்போது, இரவு காவலாளி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து, கொலை முயற்சி வழக்கில் ஷோபன்பாபுவை காவல் துறையினர் கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in