

சென்னை: சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்,தனது காதலியுடன் கடந்த 3-ம் தேதிமெரினா கடற்கரைக்கு சென்றார்.பின்னர், வீடு திரும்புவதற்காக சர்வீஸ் சாலையில் நிறுத்தியிருந்ததனது இருசக்கர வாகனத்தை எடுக்க முயன்றபோது, அருகில் இருந்த 2 சக்கர வாகன உரிமையாளருடன் தகராறு ஏற்பட்டது.
அருகிலிருந்தவர் தனது நண்பர்கள் 4 பேரை வரவழைத்து, இளைஞரையும், அவரது காதலியையும் தாக்கினார். சப்தம் கேட்டுவந்த, ஆயுதப்படை பெண் காவலர் கலா தகராறு செய்த இளைஞர்களை தட்டிக் கேட்டார். இதனால்,பெண் காவலரை அந்த இளைஞர்கள் தள்ளி விட்டு, 3 இருசக்கர வாகனங்களில் தப்பினர்.
சுதாரித்துக் கொண்ட பெண்காவலர் கலா, தனது செல்போனில் அவர்களையும், அவர்கள் தப்பிச்சென்ற இருசக்கர வாகனங்களையும் புகைப்படம் எடுத்து, அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தார். அதன் அடிப்படையில் அண்ணாசதுக்கம் போலீஸார் விசாரித்தனர்.
இதில், காதலர்களை தாக்கியவர்கள் வால்டாக்ஸ் சாலை உதயகுமார் (19), தமிழரசன் (21), சோமசுந்தரம் (22), வசந்தகுமார் (22) என்பது தெரிந்தது. அவர்கள் 4 பேரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்து 3 இருசக்கர வாகனங்கள் மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்தனர்.