Published : 05 Jun 2023 06:33 AM
Last Updated : 05 Jun 2023 06:33 AM

சென்னை | திருடப்பட்ட இருசக்கர வாகனத்தில் சென்று கல்லூரி மாணவரிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது

சென்னை: இருசக்கர வாகனத்தைத் திருடிஅதில் சென்று கல்லூரி மாணவரிடம் செல்போன் பறித்ததாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை, ஏழுகிணறு, மின்ட் தெருவைச் சேர்ந்தவர் கல்லூரி முதலாமாண்டு மாணவர் ஹரிஷ் (17). இவர் வெளியூர் சென்றுவிட்டு, நேற்று முன்தினம் அதிகாலை 5.30 மணியளவில் தனது வீட்டுக்குச் செல்வதற்காக ஏழுகிணறு, அம்மன் கோயில் தெருவில் உள்ள மாநகராட்சி பள்ளி அருகில் செல்போனில் பேசியவாறு நடந்து சென்று கொண்டிருந்தார்.

17 வயது சிறுவன்: அப்போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த 2 இளைஞர்கள் ஹரிஷ் கையில் வைத்திருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

அதிர்ச்சி அடைந்த மாணவர் இதுகுறித்து ஏழுகிணறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீஸார் வழக்குப் பதிந்து, சம்பவ இடத்தின் அருகேபொருத்தப்பட்டிருந்த கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதன் அடிப்படையில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டதாக வண்ணாரப்பேட்டை முத்துமாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த காமேஷ் (19) என்பவரை கைது செய்தனர். அவரது கூட்டாளியான 17 வயது சிறுவனும் பிடிபட்டார்.

அவர்களிடமிருந்து ஒரு செல்போன் மற்றும் குற்றச் சம்பவத்துக்குப் பயன்படுத்திய இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், விசாரணையில் கைதுசெய்யப்பட்ட இருவரும் சேர்ந்துகடந்த 2-ம் தேதி இரவு ஏழுகிணறுகாவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ரத்தினம் தெருவில் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தைத் திருடிக் கொண்டு, அதில் சென்று செல்போன் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதற்கிடையில் கைது செய்யப்பட்ட காமேஷ் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். 17 வயது சிறுவன் அரசு கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x