சென்னை | நடுரோட்டில் கார் தீப்பிடித்து விபத்து - 5 இருசக்கர வாகனங்களும் எரிந்தன

சென்னை | நடுரோட்டில் கார் தீப்பிடித்து விபத்து - 5 இருசக்கர வாகனங்களும் எரிந்தன
Updated on
1 min read

சென்னை: சென்னை கோவிலம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் குமார் (44). மாற்றுத் திறனாளியான இவர், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நண்பரை பார்ப்பதற்காக தனது சகோதரரின் காரை வாங்கி சென்றார்.

இந்த காரை சுரேஷ் குமாரின் மற்றொரு நண்பர் பாபு என்பவர் ஓட்டினார். அவர்கள் நேற்று மதியம் 1.15 மணியளவில் அடையாறு எல்.பி. சாலை வழியாக வந்த போது காரில் இருந்து கரும்புகை வெளியேறியது. அதிர்ச்சி அடைந்த பாபு காரை நிறுத்தினார். காரில் இருந்து அவரும், சுரேஷ் குமாரும் கிழே இறங்கி சற்று நேரத்தில் கார் தீடிரென்று தீப்பிடித்து மளமளவென எரிய தொடங்கியது.

பின்னர் கொளுந்து விட்டு எரிந்த தீயால், மேம்பாலத்தின் கீழே நிறுத்தப்பட்டிருந்த 5 இருசக்கர வாகனங்களுக்கும் தீ பரவியது. இந்நிலையில் சம்பவம் குறித்து தகவலறிந்து மயிலாப்பூர் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்தனர். தண்ணீரை பீய்ச்சி அடித்து காரில் பற்றிய தீயை அணைந்தனர். இந்த தீ விபத்தில் காரும், 5 மோட்டார் சைக்கிள்களும் முற்றிலும் உருக்குலைந்தது.

இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். காரில் கரும்புகை வெளியேறியவுடன் கீழே இறங்கியதால் சுரேஷ் குமாரும், அவரது நண்பரும் உயிர் தப்பினர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in