கரோனா அச்சம்; இத்தாலியில் தவிக்கும் தமிழக மாணவர்களை மீட்க நடவடிக்கை: ராமதாஸ் வலியுறுத்தல்

ராமதாஸ்: கோப்புப்படம்
ராமதாஸ்: கோப்புப்படம்
Updated on
1 min read

கரோனா வைரஸால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள இத்தாலியில் இருந்து தமிழக மாணவர்களை இந்தியா அழைத்து வருவதற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இத்தாலியில் நேற்று வரை கரோனா வைரஸ் பாதிப்புக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 463 ஆக அதிகரித்திருந்தது. இத்தாலியில் நேற்று ஒருநாளில் மட்டும் 70-க்கும் அதிகமானவர்கள் கோவிட்-19 காய்ச்சலுக்குப் பலியாகினர். இதுவரை 724 பேர் கோவிட்- 19 காய்ச்சலிருந்து விடுபட்டுள்ளனர். 9,000-க்கும் அதிகமானவர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சீனாவுக்கு அடுத்தபடியாக கரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ள இத்தாலி நாட்டில் சிக்கித் தவிக்கும் தமிழக மாணவர்களை மீட்க வேண்டும் என, ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, அவர் இன்று (மார்ச் 11) தன் ட்விட்டர் பக்கத்தில், "சீனாவுக்கு அடுத்தபடியாக கரோனா வைரஸால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள இத்தாலி நாட்டின் மிலன் நகரில் சிக்கித் தவிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் 55 பேரை மீட்டு தாயகம் அழைத்து வர மத்திய வெளியுறவுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்!

இத்தாலியில் தமிழக மாணவர்களுக்கு, 'கரோனா பாதிப்பு இல்லை' என்ற சான்றிதழ் கிடைப்பதில் ஏற்படும் தாமதம்தான் தாயகம் திரும்ப முடியாததற்குக் காரணமாகும். உடனடியாக அவர்களுக்கு மருத்துவ ஆய்வு நடத்தி சான்றிதழ் கிடைக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in