தமிழகத்தில் புதிதாக 494 பேருக்கு கரோனா பாதிப்பு
சென்னை: தமிழகத்தில் இன்று ஆண்கள் 294, பெண்கள் 200 என மொத்தம் 494 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 75 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 35 லட்சத்து 68,166 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 35 லட்சத்து 24,970 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 537 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். தமிழகம் முழுவதும் 5,161 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழப்பில்லை.
தமிழகத்தில் நேற்று கரோனா தொற்று பாதிப்பு 512 ஆகவும், சென்னையில் 77 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்த வண்ணம் உள்ளது.
முன்னதாக, இன்று காலை நேர நிலவரப்படி இந்தியாவில் புதிதாக 5,439 பேர் கரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 65,732 பேர் நோய் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
22,031 பேர் கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக நாட்டில் 212.17 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
