

புதுடெல்லி: மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று காலை 8 மணியளவில் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் 24 மணி நேரத்தில் 20,557 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 44 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 5,26,211 ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 24 மணி நேரத்தில் 1,297 அதிகரித்து 1,46,323 ஆகி உள்ளது. இது இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரில் 0.33 சதவீதம் ஆகும். 98.47 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். 1.2 சதவீதம் பேர் உயிரிழந்துள்ளனர். தினசரி கரோனா சோதனைக்கு உட்படுத்தப்படுபவர்களில் தொற்று உறுதி செய்யப்படுவோர் விகிதம் 5.18 சதவீதமாகவும் வாராந்திர சராசரி 4.71 சதவீதமாகவும் உள்ளது. நாடு முழுவதும் இதுவரை 203.21 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.