Published : 10 Jul 2022 06:19 AM
Last Updated : 10 Jul 2022 06:19 AM
புதுடெல்லி: நாடு முழுவதும் ஐந்து முதல் 12 வயது குழந்தைகளுக்கு கார்பிவேக்ஸ், கோவாக்சின் தடுப்பூசிகளை பயன்படுத்த, தடுப்பு மருந்துகளுக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழு (என்டிஏஜிஐ) ஒப்புதல் வழங்கியுள்ளது.
பள்ளிகளில் மேற்கொள்ளப்படும் கரோனா தடுப்பூசி பிரசாரத்தில், தகுதியான குழந்தைகள் அனைவருக்கும் விரைவில் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியிருந்தார்.
பயோலாஜிக்கல் இ நிறுவனத்தின் கார்பிவேக்ஸ் தடுப்பூசியை 5 முதல் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும், பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியை 6 முதல் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் அவசர காலத்துக்கு பயன்படுத்த இந்திய மருந்துகள் தலைமை கட்டுப்பாட்டாளர் (டிசிஜிஐ) சமீபத்தில் ஒப்புதல் வழங்கியிருந்தார்.
இந்த இரண்டு தடுப்பூசிகளின் தரவுகளை, தடுப்பு மருந்துகளுக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழு கடந்த மாதம் ஆய்வு செய்தது. தற்போது இந்த தடுப்பூசிகளை 5 முதல் 12 வயது குழந்தைகளுக்கு பயன்படுத்த இந்த குழு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், மத்திய அரசின் கரோனா தடுப்பூசி திட்டத்தில் இந்த மருந்தை 5 முதல் 12 வயது குழந்தைகளுக்கு அறிமுகம் செய்வது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT