Published : 06 Jul 2022 07:58 PM
Last Updated : 06 Jul 2022 07:58 PM

தமிழகத்தில் புதிதாக 2,743 பேருக்கு கரோனா பாதிப்பு; சிகிச்சையில் 17,000+

சென்னை: தமிழகத்தில் இன்று ஆண்கள் 1,537, பெண்கள் 1,206 என மொத்தம் 2,743 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 1062 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 90,834ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 34 லட்சத்து 35,090 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 1,791பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். இன்று நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழப்பில்லை. தற்போது மாநிலம் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டோர் உள்பட சிகிச்சைப் பெற்று வருவோரின் எண்ணிக்கை 17,717 ஆக உள்ளது.

தமிழகத்தில் நேற்று கரோனா தொற்று பாதிப்பு 2,662 ஆகவும், சென்னையில் 1060 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த சில வாரங்களாக கரோனா பாதிப்பு தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. தொற்று பாதிப்பு சென்னையில் மட்டும் கடந்த சில நாட்களாக 1000-ஐ கடந்துள்ளது.

முன்னதாக, இன்று காலை நேர நிலவரப்படி இந்தியாவில் புதிதாக 16,159 பேர் கரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 15,394 பேர் கடந்ந 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக நாட்டில் 198.20 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகைப்படம்
முன்னதாக இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "கரோனா தினசரி பரிசோதனைகளில் 10 சதவீதத்திற்கும் மேல் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டாலோ அல்லது 40 சதவீதத்திற்கும் மேல் மருத்துவ சிகிச்சையில் இருந்தாலோ மட்டுமே ஊரடங்கு என்பது அவசியமாகும். 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தற்போது சிகிச்சையில் இருந்தாலும் கூட மருத்துவ சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைவாகவே உள்ளது.

எனவே, தற்போதைய நிலையில் ஊரடங்கிற்கு அவசியம் இல்லை , ஊரடங்கு பிறப்பிக்க அவசியம் ஏற்படாத வகையில் பொதுமக்களும் அரசின் நிலையான வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும்" என்று அவர் கூறினார்.

முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம்

சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இந்நிலையில், சென்னை பெருநகர காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை பெருநகரில் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த, பொதுமக்கள் அதிகம் கூடுமிடங்களான மார்க்கெட் பகுதிகள், அங்காடிகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், பூங்காக்கள் மற்றும் ஏனைய பொது இடங்களில் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.

பொது இடங்களில் முகக்கவசம் அணியாத நபர்களுக்கு தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் 1939-ன்படி ரூ.500/- அபராதம் விதிக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை சார்பாக தெரிவித்துக் கொள்ளப்படுகிறது" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x