

சென்னை: தமிழகத்தில் இன்று ஆண்கள் 121, பெண்கள் 98 என மொத்தம் 219 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 129 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 56,916 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 34 லட்சத்து 17,732 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 137 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். தமிழகம் முழுவதும் 1,159 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று உயிரிழப்பு இல்லை.
தமிழகத்தில் நேற்று கரோனா தொற்று பாதிப்பு 185 ஆகவும், சென்னையில் 94 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, இன்று காலை நேர நிலவரப்படி இந்தியாவில் புதிதாக 7,584 பேர் கரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 36,267 பேர் நோய் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 3,791 பேர் கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக நாட்டில் 194.76 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4-வது அலையா?
இதனிடையே, இந்தியாவில் 4-வது கரோனா அலை வருவதாக கூறுவது தவறானது என்று ஐசிஎம்ஆர் கூடுதல் தலைமை இயக்குனர் சமிரன் பாண்டா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினசரி கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே உள்ளது. குறிப்பாக தமிழகம், மகாராஷ்டிரா, கேரளா, தெலங்கானா மற்றும் கர்நாடகாவில் கரோனா தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த மாநிலங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று மத்திய சுகாதாரத்தறை அறிவுறுத்தி உள்ளது.
இந்நிலையில், சில மாவட்டங்களில் தொற்று அதிகரிப்பதை வைத்து 4-வது கரோனா அலை வருவதாக கூறுவது தவறானது என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஐசிஎம்ஆர் கூடுதல் தலைமை இயக்குநர் சமிரன் பாண்டா ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், "இந்தியாவில் 4-வது கரோனா அலை வருவது என்று கூறுவது தவறானது. மாவட்ட அளவில் தரவுகளை ஆய்வு செய்ய வேண்டும். ஒரு சில மாவட்டங்களில் தொற்று அதிகரிப்பத்தை வைத்து கொண்டு நாடு முழுவதும் தொற்று அதிகரிப்பதாக கூற முடியாது. அனைத்து வகை உருமாறிய தொற்றுகளும் அச்சத்தை ஏற்படுத்துவது அல்ல" என்றார்.