

சென்னை: தமிழகத்தில் இன்று ஆண்கள் 28, பெண்கள் 18 என மொத்தம் 46 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 25 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 54,847 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 34 லட்சத்து 16,501 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 40 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். தமிழகம் முழுவதும் 321 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று உயிரிழப்பு இல்லை. தமிழகத்தில் நேற்று கரோனா தொற்று பாதிப்பு 37 ஆகவும், சென்னையில் 20 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, இன்று காலை நேர நிலவரப்படி இந்தியாவில் புதிதாக 2,323 பேர் கரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 14,996 பேர் நோய் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2,346 பேர் கடந்ந 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக நாட்டில் 192.12 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும்போது, "கரோனா வைரஸ் பலவகையாக உருமாறி பரவிக்கொண்டே வருகிறது. கரோனா வைரஸில் ஆல்பா, பீட்டா, டெல்டா, டெல்டா பிளஸ், காமா, கப்பா என நிறைய உருமாற்றம் நிகழ்ந்துவிட்டது. இறுதியாக ஒமைக்ரான் வந்தது. அதிலும் பி ஏ 1 பி ஏ 2 என்று 7 வகை வைரஸ்கள் உலகம் முழுவதும் பரவுவதாக கூறினார்கள்.
தமிழகத்தில் இதுவரை பி ஏ 1 மற்றும் பி ஏ 2 மட்டும்தான் வெளிப்படையாகத் தெரிந்தது. தமிழகத்தில் தற்போது பி ஏ 4 கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் இரண்டு மூன்று பேருக்கு தொற்று ஏற்பட்டால், உடனடியாக ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. அதன் அடிப்படையில் இங்குள்ள மரபணு பகுப்பாய்வு கூடத்தில் செய்யப்பட்ட சோதனை மூலம் இது கண்டறியப்பட்டுள்ளது.
அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நாவலூரில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருந்தது. உடனடியாக அவர்களது மாதிரிகளை மரபணு ஆய்வுக்கு அனுப்பியதில் ஒருவருக்கு, அது பி ஏ 4-ல் ஒரு வகை என்பதும், மரபணுவில் ஒரு உருமாற்றம், புதிய வகை வைரஸ் என்பது கண்டறியப்பட்டுள்ளது'' என்றார்.