Published : 28 Mar 2020 12:13 PM
Last Updated : 28 Mar 2020 12:13 PM

கரோனா பற்றி நாம் அறிந்தது என்ன? குழந்தைகள், கருத்தரித்த பெண்கள்,  கருவில் உள்ள குழந்தையை கரோனா பாதிக்குமா? - யூனிசெஃப் நெடிய விளக்கம்

உலகை அச்சுறுத்தி வரும் கரோனாவுக்க்கு பலியானோர் 27,365 பேர்கள், பாதிக்கப்பட்டவர்கள் 5,97,267, பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தாலி கரோனா மையமாகி 9000 பேர் பலியாகியுள்ளனர், ஒரே நாளில் 969 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவிலும் கடுமையாகப் பரவியுள்ளது. இதுவரை கரோனாவிலிருந்து 1,33,363 பேர் பிழைத்துள்ளனர்.

இந்நிலையில் ஏகப்பட்ட விஞ்ஞான விளக்கங்கள் வந்தாலும் கரோனா பற்றிய நமது அறிவு போதுமானதா, அதன் முழு வீச்சு என்ன? கருத்தரித்த பெண்களுக்கு கரோனா இருந்தால் கருவில் உள்ள குழந்தையை பாதிக்குமா உள்ளிட்ட அடிப்படை கேள்விகளுக்கு யூனிசெஃப் அமைப்பு வினா-விடை வடிவத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அது வருமாறு:

1. கரோனா வைரஸ் பற்றி நாம் அறிந்தது என்ன?

கரோனா வைரஸ் அல்லது கொரோனா வைரஸ் எனப்படுவது யாதெனின் சாதாரண சளிக்குக் காரணமாகும் வைரஸ் மற்றும் சார்ஸ் ரக வைரஸ் வகையைச் சேர்ந்ததாகும். மற்ற கரோனா வைரஸ்கள் போலவே இதுவும் இருமல், தும்மல் போன்ற மூச்சுக்குழல் துளிகளிலிருந்து பிறருக்கு நேரடி தொடர்பில் தொற்றுவதாகும். வைரஸ் தொற்று உள்ள தரை, சுவர் உள்ளிட்ட இடங்களைத் தொடுவதன் மூலமாகவும் பரவுவதாகும்.

இதன் அறிகுறிகளில் காய்ச்சல், வறட்டு இருமல், களைப்பு, மூச்சுத் திணறல் உள்ளிட்டவை அடங்கும். சிலருக்கு மெல்லிய அறிகுறிகளும் சிலருக்கு அறிகுறிகளே இல்லாமலும் தொற்று இருக்கக் கூடும். 80% மக்கள் சிறப்புச் சிகிச்சை இல்லாமலேயே குணமடைந்து விடுவார்கள். தீவிர கரோனா வைரஸ் தொற்று உள்ளவர்களுக்கு நிமோனியா, தீவிரக் காய்ச்சல் ஆகியவற்றினால் மரணமும் ஏற்படலாம். வயதானவர்கள், குறிப்பாக வேறு நோயுள்ளவர்களை கரோனா பீடிக்கும் ஆபத்து அதிகம்.

பிப்ரவரி 28, 2020-ல் கோவிட்-19 வைரஸின் உலக அளவிலான தாக்கம், பொதுச்சுகாதாரத்தின் மீதான தாக்கம் பற்றிய மதிப்பீட்டை ’தீவிர’ தொற்று என்பதிலிருந்து ‘அதிதீவிர தொற்று’ என்பதாக மாற்றியமைத்தது. அதாவது நாடுகள் உடனடியாக ஆக்ரோஷமாக இதனுடன் போர் தொடுக்க விடுக்கப்பட்ட அழைப்பாகும் இது.

கரோனா தொற்றுக்கு எந்த ஒரு வாக்சைன் அல்லது வைரஸ் எதிர்ப்பு மருந்துகளோ இல்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு சிகிச்சை அளித்து அறிகுறிகளிலிருந்து குணப்படுத்தப்படுவார்கள். தீவிர நோய் அறிகுறிகள் உள்ளவர்களை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும். முதற்கட்ட பாதுகாப்பு சிகிச்சையிலேயே பலருக்கு குணமடைந்து விடும். இதற்கான தடுப்பு வாக்சைன்களுக்கான பலதரப்பு ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. முதல் முடிவுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கரோனா வைரஸ் தொற்றுகளைத் தடுக்க

மக்கள் அடிக்கடி தங்கள் கைகளை ஆல்கஹால் உள்ள கிருமி நாசினி அல்லது சாதாரண சோப்பினால் கழுவ வேண்டும்.

இருமும் போதும் தும்மும் போதும் கையில் துணியை வைத்துகொண்டு இருமவோ தும்மவோ செய்ய வேண்டும்.

இருமல் அல்லது மற்ற ஃப்ளூ காய்ச்சல் அறிகுறிகள் இருப்பவரிடமிருந்து விலகி இருக்க வேண்டும்.

இருமல், காய்ச்சல், மூச்சுத்திணறல் இருப்பவர்கள் மருத்துவ சிகிச்சைப் பெறுவது நல்லது. மருத்துவர்களிடம் வெளிநாடு சென்று திரும்பியிருந்தால் அதன் விவரங்களையும் தெரிவிப்பது நல்லது.

2.குழந்தைகள் மற்றும் கருத்தரித்த பெண்களில் தொற்று பற்றி நாம் அறிவது என்ன?

இது வரை கரோனா வைரஸ் அல்லது கோவிட்-19 என்பது கர்ப்பமான பெண்களுக்கோ, குழந்தைகளுக்கோ தொற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை. இந்த புதிய வைரஸ் இவர்களை எப்படி தொற்ற வாய்ப்பு உண்டு என்பதை நாம் இன்னும் ஆராய்ச்சி செய்து கொண்டுதான் இருக்கிறோம்.

இப்போதுவரை குழந்தைகள் கோவிட்-19 வைரஸுக்கு பாதிக்கப்படக் கூடிய நிலையில் இருப்பவர்கள் என்பதற்கான எந்த ஒரு அறிவியல் ஆதாரங்களும் இல்லை. உலகச் சுகாதார அமைப்பும் சீனாவும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் 18 வயதுக்கும் குறைவானவர்கள் கரோனா பாதிப்புக்கு ஆளாகியது மொத்த பாதிப்பில் 2.4% தான், அதிலும் பெரும்பாலும் வீடுகளில் யாருக்காவது பாதிப்பு இருந்து அவர்கள் மூலம் நேரடி தொடர்பில் தொற்றியதுதான் என்று கூறியுள்ளது.

ஒரு குழந்தையோ, கருத்தரித்த பெண்ணோ இதில் மரணமடையவில்லை.

குழந்தைகளுக்கு கரோனா பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்ற முதற்கட்ட அறிவியல் ஒரு புறம் இருந்தாலும் இன்னொரு புறம் பாதிக்கப்பட்டதை ரிப்போர்ட் செய்யாமல் மறைப்பதும் உள்ளது. அதனால்தான் நாடுகள் கண்டுபிடித்து, பரிசோதித்து, சிகிச்சை அளிக்கும் நெருக்கமான கடும் முறைகளைக் கடைபிடிக்க வேண்டியதாகியுள்ளது.

3.ஒரு தாய் கரோனா தொற்று இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டாலோ, அல்லது பீடிக்கப்பட்டாலோ குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கலாமா?

கரோனா பாதிப்புப் பகுதிகளில் இருக்கும் தாய்மார்களுக்கு இருமல், மூச்சுத் திணறல், காய்ச்சல் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று சோதனை செய்து கொள்வது நலம். மருத்துவர்கள் கூறும் வழிமுறைகளைக் கடைப்பிடிப்பது நல்லது.

தாய்ப்பாலின் நலன்கள் கருதியும் தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் வைரஸ் பரவுவது பற்றிய ஆதாரபூர்வமாக இதுவரை நிரூபிக்கப் படாததால் தாய்மார்கள் தொடர்ந்து குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கலாம். தவறில்லை.

ஆனால் தாய்மார்களிடமிருந்து குழந்தைக்குப் பரவும் பிற வழிகளான இருமல், தும்மல், உள்ளிட்ட நேரடித் தொடர்பு குறித்த எச்சரிக்கை தேவை. இதோடு இல்லாமல் வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட தரை, சுவர் உள்ளிட்ட இடங்களிலிருந்து குழந்தைகளுக்குப் பரவாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். எனவே குழந்தைக்கு பால் கொடுக்கும் போது முகக்கவசம் அணிவதும் பால் கொடுக்கும் முன்னும் பின்னும் கைகளை கிருமி நாசினி மூலம் கழுவுவதும் , தரை உள்ளிட்டவற்றை சுத்தம் செய்வதும் அவசியமாகும். தாயார் ரொம்பவும் உடம்பு சரியில்லாமல் இருக்கும் போது தாய்ப்பாலை ஸ்பூன் மூலம் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.

4. கருத்தரித்த பெண்கள் கரோனா தொற்றை கருவிலிருக்கும் குழந்தைக்கும் பரவச் செய்ய முடியுமா?

இப்போது வரை கரோனா கருவிலிருக்கும் குழந்தைக்கும் வரும் என்பதற்கான ஆதாரங்களோ, மகப்பேறு மற்றும் குழந்தைப் பிறந்தவுடன் தொற்றும் என்பதற்குமான ஆதாரங்கள் எதுவும் இல்லை.

5. கோவிட்-19 குழந்தைகளை எப்படி பாதிக்கும்?

கோவிட்-19 வைரஸைத் தடுக்க எடுக்கப்படும் இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் மூலமாக உலகம் முழுதும் பெரிய அளவில் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணம் ஆரம்பச் சுகாதர முறைகளில் உள்ள கோளாறுகள், இடையூறுகள் ஆகும், அதாவது சுகாதார நிலையங்கள் கரோனா அச்சத்தினால் சோதனைக்காக நோயாளிகளால் நிரம்பி வழியும் போதும் கோவிட்-19-க்கென்றே பிரத்யேகமாக ஏற்படுத்தப்பட்டுள்ள மருத்துவமனைகளில் கரோனா அச்சத்தினால் சோதனைக்காக கூடும் மக்களினாலும் குழந்தைகளுக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

பள்ளிகளுக்கு உலகம் முழுதும் தற்போது அளித்துள்ள விடுமுறை மாணவர்களைப் பாதிக்கிறது. நோய் பாதித்த பாதுகாவலர்களிடமிருந்து குழந்தைகள் பிரிக்கப்படுகின்றனர். இதனால் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். வருவாய் குறைவான குடும்பங்களில் கோவிட் 19 அச்சத்தினால் வேலைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்படும்போதும் அல்லது கரோனா தொற்றி விடும் என்ற அச்சத்தினாலும், வீட்டிலேயே நீண்ட காலம் முடங்கியிருக்க வேண்டுமோ என்ற கவலையினாலும் உளவியல் ரீதியான பாதிப்புகள் ஏற்படுகின்றன.

குழந்தைகளும் அபாயகரமான மற்றும் சேதம் ஏற்படுத்தக் கூடிய சமூகக் களங்கம் என்ற ஒன்றினால் பாதிக்கப்படுவார்கள், குறிப்பாக சீனா அல்லது கிழக்கு ஆசியக் குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்படும் போது அந்தக் குழந்தைகள் சமூகக் களங்கம் என்ற தீமைக்கு ஆளாவார்கள். அதாவது தொற்று ஏற்பட்டுள்ள நோயாளி மற்றும் அதன் குடும்ப உறுப்பினர்கள் சுகாதாரப் பணியாளர்கள் கரோனா சிகிச்சையில் முன்னணியில் இருக்கும் சுகாதாரப் பணியாளர்கள் மீது சமூகக் களங்கம் ஏற்படும், இவர்கள் தனிமைப்படுத்தப்படும் அபாயங்கள் உள்ளன

ஒருவருக்கு தொற்று ஏற்படும் ரிஸ்க் மற்றும் பிறருக்கும் அதை தொற்ற வைக்கும் ரிஸ்க்குகள் பற்றியதும், கோவிட்-19 பிறருக்குத் தொற்றும் நிலையில் இருப்பது பற்றியும் எந்த ஒரு தகவலும் 100% தெளிவானதாக இல்லை. இரண்டாவதாக சாதாரண சளி, இருமல், போன்ற விஷயங்களை கோவிட்-19 என தவறாக அச்சம் கொள்ளும் நிலை, மூன்றாவதாக, சுகாதாரப் பாதுகாவலர்கள் தங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்தை நினைத்துக் கவலைப்படும் தன்மை அதாவது வீட்டில் இருக்கும் குழந்தைகள் தாங்கள் பணிக்குச் சென்று விடுவதால் கவனிப்பாரற்றுப் போய்விடும் என்று இவர்களுக்கு ஏற்படும் கவலை, நான்காவதாக குழந்தைகள், முதியோர்கள், மாற்றுத் திறனாளிகளைக் கவனித்து கொள்பவர்கள் நோய்க்காகத் தனிமைப்படுத்தப்பட்டால் குழந்தைகள், முதியோர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்படும் உடல்/மன பிரச்சினைகள் ஆகியவை முக்கியமாகப் பரிசீலிக்கப்பட வேண்டியதாகும்.

கோவிட்-19-ஐ கட்டுப்படுத்துவது என்பது வெறுமனே இதோடு நின்று விடுவதல்ல, இத்தனைக் கூறுகளையும் விளைவுகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ள அழைப்பு விடுப்பதாகும். வைரசைக் கட்டுப்படுத்தும் அளவுகோல்கள் அதன் வாழ்வாதார, பிற சமூக பிரச்சினைகளையும் சிக்கல்களையும் கணக்கில் எடுத்துக் கொள்வது அவசியமாகிறது.

இதற்காகக்கத்தான் யூனிசெஃப் அரசுகளுக்கும் , நிர்வாகிகளுக்கும், பள்ளித் தலைமைகளுக்கும், பெற்றோருக்கும் ஆலோசனைகளை வழங்கி இடையூறில்லாத வாழ்க்கையை வாழ வழிவகை செய்கிறது.

6. பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் போது பெற்றோர்கள் குழந்தைகளுக்கு கல்வியைப் போதிப்பது எப்படி?

குழந்தைகள் வீட்டிலேயே தொடர்ந்து படித்து, எழுதி கற்பதை பெற்றோர் அல்லது பார்த்துக் கொள்பவர்கள் ஊக்குவிக்க வேண்டும். அவர்களுக்கு வாசித்துக் காட்ட வேண்டும், விளையாட்டு மூலம் கற்றல், பள்ளிகளில் கொடுத்த வேலைகளை பெற்றோர் குழந்தைகள் சேர்ந்தே செய்வது, அல்லது குழந்தைகளுக்கு இதில் உதவுவது, ஆன்லைன் கற்றல் சேனல்கள் மூலம் பாதுகாப்பாக ஈடுபட்டு கற்றலை ஊக்குவித்தல் அல்லது கல்வி வானொலி, தொலைக்காட்சி கல்வி நிகழ்ச்சிகள் மூலம் குழந்தைகளை கற்றலில் ஈடுபடுத்துவது ஆகியவற்றின் மூலம் குழந்தைகளின் ஈடுபாட்டை வளர்க்கலாம்.

7. ஆன்லைன் கற்றல் பற்றி பெற்றோர், பாதுகாப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

தேச அரசுகள் மற்றும் உள்நாட்டு கூட்டாளிகள் மூலம் ஆன்லைன் அல்லது தொலைக் கற்றல் முறைகளை யூனிசெஃப் ஆதரிக்கிறது.

இதற்காக குழந்தைகளின் கற்றலில் செயல்பூர்வமாக ஈடுபடுவது முக்கியம். மனிதர்களுக்கு இடையிலான உரையாடலை உள்ளடக்கி, கற்றல் அனுபவத்தின் ஒரு உட்பொருளாக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டியதும் முக்கியமானது. இது இளம் குழந்தைகளைப் பொறுத்தவரை உண்மையாகும்.

குழந்தைகள் பற்றிய தரவுகளை பாதுகாக்கவும். குழந்தைகள் பார்க்கும், படிக்கும் இணையதளங்களின் தன்மைகளை பெற்றோர் அறிந்திருக்க வேண்டும். அதிகமாக சொந்த தகவல்களைக் கேட்கும் மற்றும் பாதுகாப்பற்ற ஆன்லைன்களை தவிர்க்கவும். குழந்தைகளின் அடையாளம், இன மற்றும் மத அடையாளம் ஆகிய தகவல்கள் கல்வி இணையதளங்களுக்குத் தேவையில்லை என்பதைக் கருத்தில் கொள்ளவும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x