Published : 22 Mar 2020 10:49 PM
Last Updated : 22 Mar 2020 10:49 PM

தமிழகத்தில் கரோனா பாதிப்பு 9 ஆக அதிகரிப்பு: முதன் முதலாக பெண் ஒருவருக்கு பாதிப்பு: இருவருக்கு தொற்று உறுதியானது

தமிழகத்தில் மேலும் இருவர் கரோனா தொற்று காரணமாக மருத்துவக்கண்காணிப்பில் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜய பாஸ்கர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இதனால் தமிழகத்தில் கரோனா பாதிப்பு 9 ஆக உயர்ந்தது.

கரோனா தொற்று கரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க பொதுமக்கள் ஒன்றாகக் கூடுவதைத் தவிர்க்க வேண்டும், கை குலுக்கக் கூடாது, கிருமி நாசினிகளை உபயோகிக்க வேண்டும், 15 நாட்கள் சமுதாயத் தனிமை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோள் உலகம் முழுவதும் வைக்கப்பட்டது.

கரோனா பாதுகாப்பு எச்சரிக்கையை அலட்சியப்படுத்திய பல நாடுகள் கரோனாவின் மோசமான மூன்றாவது கட்டமான சமுதாயப் பரவல் கட்டற்றுப் பரவும் நிலைக்கு பல நாடுகள் ஆளாயின. இத்தாலியும், ஈரானும் இதற்கு மிகச்சிறந்த உதாரணம். இங்கு கொத்து கொத்தாக மரணம் நிகழ்ந்தது. இன்று செய்வதறியாமல் அந்த நாடுகள் கையைப் பிசைந்து கொண்டு நிற்கின்றன. இதேபோன்ற நிலை இந்தியாவுக்கு வந்துவிடக்கூடாது என மருத்துவர்கள், அரசாங்கங்கள் போராடுகின்றன.

இரண்டாம் நிலையில் இருக்கும் இந்தியா, தனிமைப்படுத்திக்கொள்வதன் மூலம் மூன்றாம் நிலையான சமுதாயப் பரவலைத் தடுக்க முடியும் என்பதால் மக்கள் மார்ச் 31-ம் தேதி வரை தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என அனைத்துக் கல்வி நிறுவனங்கள், ஷாப்பிங் மால்கள், திரையரங்குகள், வழிபாட்டுத் தலங்கள், சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டன.

டெல்லி இளைஞர் தவிர இதுவரை கண்டறியப்பட்ட 6 பேரும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள். இந்நிலையில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பில் மேலும் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார். முதல்முறையாக ஒரு பெண் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அவரது ட்விட்டர் பதிவு:

“கரோனா தொற்றில் மேலும் இரு நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். முதல்நபர் கலிபோர்னியாவிலிருந்து வந்த 64 வயது பெண்மணி அவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தனி வார்டில் வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மற்றொரு நபர் துபாயிலிருந்து திரும்பிய 43 வயது நபருக்கு நோய்தொற்று இருப்பது கண்டறியப்பட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். இரண்டு நோயாளிகளும் நல்ல நிலையில் உள்ளனர்”.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x