கரோனா: திமுக எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் முதல்வர் நிவாரண நிதிக்கு ஒருமாத சம்பளத்தை வழங்குவார்கள்; ஸ்டாலின் அறிவிப்பு

மு.க.ஸ்டாலின்: கோப்புப்படம்
மு.க.ஸ்டாலின்: கோப்புப்படம்
Updated on
1 min read

கரோனா வைரஸ் பரவலால் பாதிக்கப்பட்டுள்ள அமைப்பு சாராத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்கு உதவிடும் வகையில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களும், மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களும் தங்களது ஒரு மாதச் சம்பளத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்குவார்கள் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 22) வெளியிட்ட அறிவிப்பில், "கரோனா தொற்று பரவலால் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ள அமைப்பு சாராத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்கு உதவிடும் வகையில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களும், மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களும் தங்களது ஒருமாத சம்பளத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்குவார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழக அரசும், உடனே போதிய நிதி ஒதுக்கீடு செய்து, அமைப்பு சாராத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றிட முன்வர வேண்டும். தமிழகத்தில் உள்ள தொழிலதிபர்களும் இந்த மனிதநேய முயற்சியில் தாங்களும் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தமிழக அரசு கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் நான் வலியுறுத்தியதை மீண்டும் வலியுறுத்துகிறேன்.

கரோனா தொடர்பாக மத்திய - மாநில அரசுகள் வெளியிடும் சுய ஊரடங்கு உள்ளிட்ட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கும் இன்று போல் மக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கி, மிகுந்த விழிப்புணர்வுடனும் சுய சுகாதாரத்தைக் கடைப்பிடித்தும், கரோனா தொற்று பரவலை முழுமையாகத் தடுத்திடவும் வேண்டும் என்று அனைவரையும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்" என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in