

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மார்ச் 31-ம் தேதி வரை அனைத்து பயணிகள் ரயில் சேவைகளையும் ரத்து செய்து, இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
உலக அளவில் கரோனா வைரஸ் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை இந்தியாவில் கரோனா வைரஸால் 324 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 6 ஆக உயர்ந்துள்ளது.
முன்னெச்சரிக்கையாக மார்ச் 31-ம் தேதி வரை ரத்து செய்யப்படும் ரயில் டிக்கெட்டுகளுக்கு பிடித்தம் இருக்காது என்று ரயில்வே அறிவித்திருந்தது. மார்ச் 21-ம் தேதி முதல் ஜூன் 21-ம் தேதி வரை ரத்து செய்யப்படும் ரயில் டிக்கெட்டுகளுக்கான கட்டணங்களை திரும்பப் பெறுவதிலும் சில சலுகைகளை அறிவித்தது.
பயணிகளின் வருகை குறைவு காரணமாக 100-க்கும் மேற்பட்ட ரயில்களின் சேவைகள் நிறுத்தப்பட்டன. அதேபோல ரயில் நிலையல்களில் ஏ.சி. பெட்டிகளில் பயணிகளுக்கு வழங்கப்படும் கம்பளிப் போர்வை போன்றவை வழங்கப்படாது என்று ஏற்கெனவே ரயில்வே அறிவித்திருந்தது.
இந்நிலையில் மார்ச் 31-ம் தேதி வரை அனைத்து பயணிகள் ரயில் சேவைகளையும் ரத்து செய்து, இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நடைபெற்ற அதிகாரிகள் கூட்டத்தை அடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து சரக்கு ரயில்கள் மட்டும் வழக்கம்போல் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புறநகர் ரயில்களும், மெட்ரோ ரயில்களும் இன்று இரவு வரை இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது,
மார்ச் 13 மற்றும் மார்ச் 16 ஆகிய தேதிகளில் ரயில்களில் பயணித்த பயணிகள் 12 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வே அறிவிப்பு: