Published : 22 Mar 2020 12:33 PM
Last Updated : 22 Mar 2020 12:33 PM

கோவிட்-19-க்கு எதிரான வாக்சைன் எப்போது தயாராகும்? இப்போதைய நிலவரம் என்ன? விஞ்ஞானிகள் ஆய்வு செய்வது என்ன?

உலகம் முழுதும் கரோனா என்ற வைரஸ் பரவி சுமார் 11,000த்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர், உலகம் முழுதும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கான தடுப்பு மருந்துதான் என்ன என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் வாக்சைன் தயாரிப்பில் சில சோதனைக்கூடங்கள் ஈடுபட்டுள்ளன.

இதுவரை நடந்தது என்ன?

சீன ஆராய்ச்சியாளர்கள் நாவல் கரோனா வைரஸ் மரபணு வரிசையை அமெரிக்காவுக்கு அனுப்பிய 100 நாட்களுக்குப் பிறகு முதற்கட்ட மருத்துவ சோதனை 18 வயது முதல் 55 வயதினையுடைய 45 ஆரோக்கியமான நபர்களுக்கு அமெரிக்காவின் சியாட்டிலில் நடத்தப்பட்டது. இதுதவிர வேறுபட்ட வாக்சைன் அணுகுமுறைகளும் மேற்கொள்ளப்பட்டன.

அமெரிக்காவில் சோதனை செய்யப்பட்ட வாக்சைன் பெயர் mRNA-1273 (messenger ribonucle acid) ஆகும். இது வாக்சைன் ஆய்வு மையத்துடன் இணைந்து நடத்தப்பட்டதாகும். இவர்களுடன் மாசாச்சுசெட்சில் உள்ள பயோ-டெக்னாலஜி நிறுவனமான மாடர்னா என்ற நிறுவனமும் இணைந்தது.

வாக்சைன்கள் என்றால் என்ன, அவை எப்படி தயாரிக்கப்படுகின்றன?

நோயை அதன் மூலத்திலேயே தடுத்தாட்கொள்வதுதான் வாக்சைன்கள் ஆகும். ஒரு குறிப்பிட்ட நோயை உருவாக்கும் காரணி எதுவோ அது போன்றதே வாக்சைனும். ஆனால் வாக்சைன் நோயை உருவாக்குவதல்ல, நோயைத் தடுப்பது. நம் உடலில் ஏற்கெனவே இருக்கும் நோய் எதிர்ப்பு ஆற்றலை புதிய வைரஸ் அல்லது பாக்டீரியா போன்ற நோய் உருவாக்கக் காரணியை எதிர்த்துப் போராட பயிற்சி அளிப்பதே வாக்சைன். பயிற்சி அளிப்பதோடு எதிர்காலத்துக்கான அதன் நினைவையும் உடலுக்குள் தக்கவைப்பது.

போலியோ, இன்ஃப்ளுயென்சா, மூளைக்காய்ச்சல் (மெனஞ்ஜைட்டிஸ்), டைபாய்ட், டெடனஸ், டிப்தீரியா, மற்றும் சிலவகை கேன்சர்கள் ஆகிய உயிர்க்கொல்லி நோய்களிலிருந்து வாக்சைன்கள் தான் நம்மைக் காப்பாற்றியுள்ளது. போலியோ, அம்மை போன்றவை கிட்டத்தட்ட இன்று இல்லாமல் போனதற்கு காரணம் வாக்சைன்களே பொறுப்பு.

வாக்சைன்கள் பலவிதங்களில் தயாரிக்கப்படுகின்றன. அழிக்கப்பட்ட ஒரு வாக்சைனுக்கு, நோய் உருவாக்க கிருமி ரசாயனங்களால் சுத்தம் செய்யப்பட்டு செயலிழப்பு செய்யப்பட்டு உடலுக்கு வெளியே பராமரிக்கப் படும். இதற்கு உதாரணம் ஊசி மூலம் செலுத்தப்படும் போலியோ மருந்தாகும். மாற்று முறையாக ஒரு நோய் உருவாக்கக் கிருமி திரும்பத் திரும்ப கல்ச்சர் செய்யப்படுவதன் மூலம் அல்லது மரபணு வழிமுறை மூலம் பலவீனப்படுத்தப்படும். இதற்கு உதாரணம் வாய்வழியாக கொடுக்கப்படும் போலியோ சொட்டு மருந்தாகும். இதுதான் ’பல்ஸ் போலியோ திட்டத்தில்’ பயன்படுத்தப்படுவது. நோய் உருவாக்கக் கிருமியின் மேற்பரப்பில் உள்ள புரோட்டீனில் ஒன்றை செயற்கையாகவும் உருவாக்க முடியும். இதன் மூலம் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க முடியும். இதற்கு உதாரணம் தான் மஞ்சட்காமாலை பி என்று அழைக்கப்படும் ஹெபடைட்டிஸ் பி வாக்சைன் ஆகும்.

கோவிட்-19-க்கு எதிரான என்ன மாதிரியான வாக்சைன்கள் உருவாக்கப்பட்டுள்ளன?

உலகச் சுகாதார கழகத்தின் தரவுகளின் படி சுமார் 40 வகையான வாக்சைன்கள் வளர்த்தெடுக்கப்பட்டு வருகின்றன. இதில் செயலிழப்புச் செய்யப்பட்ட சீனாவினால் உருவாக்கப்பட்ட சைனோவாக் (Sinovac) என்பதும் அடங்கும். சைனோவாக் என்பது ஃபார்மல்டிஹைட் என்ற ரசாயனத்தினால் கொல்லப்பட்ட, சுத்திகரிக்கப்பட்ட கோவிட்-19 வைரஸ் ஆகும். அடுத்ததாக இந்தியாவின் புனேவில் உள்ள செரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியாவும் அமெரிக்காவின் கோடாஜெனிக்ஸ் என்ற நிறுவனமும் இணைந்து மரபணு முறையில் கட்டமைக்க, தன்னை இரட்டிப்பாக்கிக் கொள்வதில் அவ்வளவாக வல்லமையற்ற ஒரு கோவிட் -19 வைரஸிலிருந்து வளர்த்தெடுக்கப்பட்ட ஒரு வாக்சைன். இதுதவிர டிஎன்,ஏ, ஆர்.என்.ஏ. வைரஸ் ஒட்டுண்ணியைப் பயன்படுத்தி வாக்சைன்கள் பலவகை வாக்சைன் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

கோவிட்-19க்கு எதிராக ஒரேயொரு வாக்சைன் தற்போது கிளினிக்கல் சோதனையில் உள்ளது? அது என்ன, எப்படி?

பரிசோதனை முயற்சியாக வளர்த்தெடுக்கப்பட்ட mRNA-1273 என்ற வாக்சைனின் எதிர்ப்பாற்றல் எதிர்வினைகள் எப்படியிருக்கின்றன என்ற சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சீனாவின் வூஹானில் நிமோனியாக் காய்ச்சலை ஏற்படுத்தும் நாவல் கரோனா வைரஸ் ஜனவரி 7ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. சீனா இதன் மரபணு தொடர்ச்சி அல்லது வரிசையை அமெரிக்காவுடன் பகிர்ந்து கொண்டது. ஜனவரி 24ம் தேதி இந்த mRNA-1273 வாக்சைன் மனித சோதனைக்கு அனுப்பப்பட்டது. இதற்கு முன்பாக மரபணு வரிசையிலிருந்து மருந்தாக இவ்வளவு விரைவில் அதாவது 42 நாட்களில் உருவாக்கப்பட்டு 63 நாட்களில் சோதிக்கப்பட்டதில்லை.

mRNA-1273 வாக்சைன் என்பது என்ன?

டிஎன்ஏ என்று அழைக்கப்படும் டியாக்ஸிரிபோநியூக்ளிய்க் ஆசிட் என்பதில்தான் வாழும் உயிரிகளின் மரபணுக்குறி சேமிக்கப்படுகிறது, இதுதான் உடலின் அனைத்துச் செயல்களுக்கும் காரணமான புரோட்டீன்களை உருவாக்குகிறது. இந்த டிஎன்ஏ குறி அல்லது சமிக்ஞையை புரோட்டீனாக மாற்ற ஒற்றை மூலக்கூறு தேவைப்படுகிறது அதுதான் இந்த mRNA-1273. கணினி சொற்பொருள்களில் விளக்க வேண்டுமெனில் டி.என்.ஏ. என்பது ஹார்டுவேர் என்றால் mRNA என்பது சாஃப்ட்வேர், புரோட்டீன்கள் என்பது அப்ளிகேஷன்கள் என்று கணினி மாதிரியில் விளக்கலாம்.

mRNA-1273 என்பது ஒரு ஆர்.என்.ஏ.துண்டு, இது செல்களில் அறிமுகப்படுத்தப்படும்போது இந்த ஆர்.என்.ஏ. அந்தக் குறியை சுமந்து சென்று கோவிட்-19 ஸ்பைக் புரோட்டினை உருவாக்கும். வைரஸ் மேற்பரப்பில் இந்த புரோட்டீன் இருந்தால்தான் அது செல்களுக்குள் நுழையவே முடியும். ஸ்பைக் புரோட்டீன்களை எதிர்க்கும் சக்தி வைரஸ் நுழைவையும், அதன் இரட்டிப்புமயமாக்கத்தையும் தடுக்கும். இதன் மூலம் நோயிலிருந்து விடுபட முடியும்.

இதனை கட்டமைப்பது சுலபம் என்றாலும் mRNA என்பது எளிதில் அழியக்கூடியது. எனவே இதனைப் பாதுகாக்க கோட்டிங் தேவைப்படும்.

கோவிட் -19 வாக்சைன்கள் வளர்த்தெடுக்கப்பட்டு விலங்குகளில் சோதிக்கப்படாமல் நேரடியாக மனிதர்களில் சோதிக்கப்படுகிறது. அப்படியிருந்தும் வாக்சைன் ஒரு மருந்தாக, முழு மருந்தாக தயாரிக்கப்பட 2 ஆண்டுகள் ஆகும். mRNA-1273 இப்படி சோதனை செய்து பார்த்தாலும் இது செயலாற்றும் என்பதையும் உறுதியாகக் கூற முடியாது.

வாக்சைன்களை தயாரித்து சோதனையிட மில்லியன்கள் கணக்கில் டாலர்களில் செலவழியும். mRNA-1273 வாக்சைன் மட்டுமல்லாது 5 கோவிட்-19 வாக்சைன்களும் வளர்த்தெடுக்கப்பட்டு வருகின்றன, இதற்கு 23.7 மில்லியன் டாலர்கள் செலவாகும்.

வைரஸ்களுக்கு எதிராக வாக்சைன்கள் மட்டுமே ஒரே வழியல்ல. இதற்காக ஒரு வைரஸை தனிமைப்படுத்தி வாக்சைன்கள் தயாரிக்கப்பட வேண்டிய அவசியமில்லை நோயாளிகளிடமிருந்தே வைரஸின் மரபணு வரிசையைப் பெற்று நவீன மூலக்கூறு உபகரணங்கள், தொழில்நுட்பங்களைக் கொண்டு புரோட்டீன்களை உற்பத்தி செய்ய முடியும். இந்த வழிமுறைகளில் இன்னமும் மனிதர்களைத் தொற்றாத பலவகை கிருமிகளுக்கும் வாக்சைன்கள் உருவாக்க முடியும். ஆனால் இவையெல்லாம் எதிர்காலத்தில் பெரிய அளவில் மேம்பாடு அடைவதற்கான ஆற்றல்கள் கொண்டவையாக இருக்கும்.

கட்டுரை ஆசிரியர்: ஷாஹித் ஜமீல், மூலம் தி இந்து ஆங்கிலம்

தமிழில் சுருக்கமாக, இரா.முத்துக்குமார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x