Published : 22 Mar 2020 12:07 PM
Last Updated : 22 Mar 2020 12:07 PM

அமெரிக்க துணை அதிபர், மனைவிக்கு கரோனா சோதனை

அமெரிக்க துணை அதிபரின் அலுவலக ஊழியர் கரோனாவால் பாதிக்கப்பட்டதை அடுத்து துணை அதிபர் மற்றும் அவரின் மனைவிக்கு கரோனா சோதனை செய்யப்பட உள்ளது.

உலக அளவில் கரோனா வைரஸ் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்காவில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 250 ஆக அதிகரித்துள்ளது. 24,200 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே நேற்று அமெரிக்க துணை அதிபரின் அலுவலக ஊழியருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதை துணை அதிபர் பென்ஸின் செய்தித் தொடர்பாளர் கேத்தி மில்லர் உறுதி செய்தார். இதனால் வெள்ளை மாளிகையில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் துணை அதிபர் மைக் பென்ஸ் மற்றும் அவரின் மனைவிக்கு கரோனா சோதனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்துப் பேசிய பென்ஸ், ''சம்பந்தப்பட்ட ஊழியருடன் நான் சில நாட்களாகத் தொடர்பில் இல்லை. எனினும் துணை அதிபர் என்ற முறையிலும் வெள்ளை மாளிகை கரோனா வைரஸ் செயல்பாட்டுக் குழுவின் தலைவர் என்ற வகையிலும் பரிசோதனை செய்துகொள்ள முடிவெடுத்துள்ளேன்.

இதனால் நானும் எனது மனைவியும் கரோனா வைரஸ் பரிசோதனை செய்து கொள்ள உள்ளோம்'' என்று தெரிவித்துள்ளார்.

துணை அதிபர் பென்ஸ், அதிபர் ட்ரம்ப்புடன் இணைந்து வெள்ளை மாளிகையில் கரோனா வைரஸ் தடுப்பு ஏற்பாடுகள் குறித்து அவ்வப்போது அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

முன்னதாக, பிரேசில் அதிபர் ஜேர் போல்சோனரோவுடன் அவரது தகவல் தொடர்புச் செயலாளர் பாபியோ வாஜ்கார்டனும் கடந்த 7-ம் தேதி அமெரிக்கா சென்றிருந்தார். இதைத் தொடர்ந்து பாபியோ கரோனாவால் பாதிக்கப்பட்டார்.

பாபியோ, ட்ரம்ப்பிடம் நேரில் பேசியதை அடுத்து, அமெரிக்க அதிபருக்கும் கரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் ட்ரம்ப்புக்கு தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x