உதகையில் அத்துமீறி சுற்றுலா பயணிகளை தங்க வைத்த விடுதிக்கு சீல்

தங்கும் விடுதிக்கு சீல்
தங்கும் விடுதிக்கு சீல்
Updated on
1 min read

உதகையில் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவை மீறி, சுற்றுலாப் பயணிகளை தங்க வைத்த தங்கும் விடுதிகளுக்கு நகராட்சி நிர்வாகம் சீல் வைத்தது.

கரோனா வைரஸ் அச்சுறுத்தலால், மாவட்ட மக்களை பாதுகாக்கும் வகையில் நீலகிரி மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது.

உதகையில் அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டு, வெளிமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களை தடை செய்து, நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாப் பயணிகளை வெளியேறுமாறு கடந்த 17-ம் தேதி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை மீறி சுற்றுலாப் பயணிகளை சில தங்கும் விடுதிகளில் தங்க வைத்திருப்பதாக நகராட்சி அதிகாரிகளுக்கு புகார் வந்தது.

இதையடுத்து, இன்று (மார்ச் 21) நகராட்சி சுகாதார ஆய்வாளர் பாஸ்கரன் மகாராஜ் மற்றும் நகராட்சி ஊழியர்கள் நடத்திய சோதனையில், ஒரு தங்கும் விடுதியில் சுற்றுலாப் பயணிகளை தங்க வைத்திருந்தது கண்டறியப்பட்டது. எனவே, அந்த விடுதிக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். தொடர்ந்து மாவட்டம் முழுவதும் தங்கும் விடுதிகளை மாவட்ட நிர்வாகம் கண்காணித்து வருகிறது.

அதே போல முகக் கவசங்களை அதிக விலைக்கு விற்ற உதகையில் உள்ள மருந்தகத்துக்கு மருந்து கட்டுபாட்டு அதிகாரிகள் சீல் வைத்தனர். மருத்தகம் 7 நாட்களுக்கு செயல்பட கூடாது என உத்தரவிட்டனர். மேலும், அதிக விலைக்கு மருந்து மற்றும் அத்தியாவசியப் பொருட்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in