சென்னையில் நாளை அம்மா உணவகங்கள் தொடர்ந்து இயங்கும்: மாநகராட்சி ஆணையர் பேட்டி

சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்: கோப்புப்படம்
சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்: கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னையில் அம்மா உணவகங்கள் நாளை தொடர்ந்து இயங்கும் என, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை, ரிப்பன் மாளிகை அலுவலக வளாகத்தில், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இன்று (மார்ச் 21) செய்தியாளர்களிடம் பேசுகையில், "சமூகத்திலிருந்து தனிமைப்படுத்திக்கொள்வது, தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது, தேவையில்லாத உள்ளூர் பயணங்களை முடிந்தவரை குறைப்பது, வீடுகளுக்குள்ளேயே இருப்பது, குறைந்தது அடுத்து வரும் 10 நாட்களுக்கு உணவகங்களுக்கு செல்வதைத் தவிர்த்து வீட்டில் சமைத்து உண்பது, கைகளை அடிக்கடி சுத்தம் செய்வது உட்பட சுய சுத்தம் உள்ளிட்ட நடவடிக்கைகளை பொதுமக்களிடம் வலியுறுத்தி வருகிறோம்.

இந்த நடவடிக்கைகள் மூலமாக கரோனா வைரஸ் பரவலை 99 சதவீதம் தடுக்க முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. அரசின் அறிவுறுத்தல்களை ஏற்று பொதுமக்கள் நடந்துகொள்ள வேண்டும்.

இதுதவிர, நாளை (மார்ச் 22), ஞாயிற்றுக்கிழமை, மக்கள் ஊரடங்கு என்ற அறிவிப்பை பிரதமர் மோடி அறிவித்துள்ளார். காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை எங்கும் செல்லாமல் வீடுகளுக்குள் இருக்க வேண்டும் என பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக சென்னை மாநகராட்சி சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அம்மா உணவகங்கள் 407 மையங்களிலும் தொடர்ந்து இயங்கும். ஏழை, எளிய மக்களுக்காக அம்மா உணவகங்கள் தொடர்ந்து இயங்கும்.

24 மணிநேர சென்னை மாநகராட்சி மருத்துவமனைகள் நாளை தொடர்ந்து இயங்கும். அதனால், பொதுமக்கள் எந்தவிதமான அச்சமும்பட வேண்டாம். தேவைப்படும்போது அருகாமை மருத்துவமனைகளுக்கு மக்கள் தொடர்ந்து செல்லலாம்" என ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in