Last Updated : 20 Mar, 2020 05:36 PM

 

Published : 20 Mar 2020 05:36 PM
Last Updated : 20 Mar 2020 05:36 PM

கரோனா நெருக்கடி; வயது வந்தோருக்கு 1000 டாலர், குழந்தைகளுக்கு 500 டாலர் நிதியுதவி: அமெரிக்கா திட்டம்

கரோனா வைரஸ் நெருக்கடி காரணமாக வயது வந்தவருக்கு 1000 டாலர், குழந்தைக்கு 500 டாலர் நிதியுதவி வழங்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

கரோனா வைரஸ் நெருக்கடியின் பொருளாதாரத் தாக்கத்தைக் குறைக்க அமெரிக்கர்களுக்கு உதவும் முயற்சிகளில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, ட்ரம்ப் நிர்வாகம் வயது வந்தோருக்கு 1000 அமெரிக்க டாலரும், ஒரு குழந்தைக்கு 500 அமெரிக்க டாலரும் வழங்கத் திட்டமிட்டுள்ளது.

கரோனாவின் தாக்கம் அமெரிக்காவைக் கடுமையாகப் பாதித்துள்ளது. அமெரிக்காவில் கரோனா வைரஸுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 200 ஆக அதிகரித்துள்ளது. சுமார் 14,340 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் புதிய திட்டம் குறித்து அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்டீவன் முனுச்சின் ஃபாக்ஸ் நியூஸிடம் தெரிவித்ததாவது:

''கரோனா வைரஸ் நெருக்கடி காரணமாக அமெரிக்கர்களின் வாழ்க்கை முடக்கப்பட்ட நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. பாதிப்பில் அவதியுறும் அனைத்து மக்களுக்கும் பொருளாதாரப் பிரச்சினையைச் சமாளிக்க உதவும் வகையில் அமெரிக்கா புதிய திட்டம் தீட்டியுள்ளது. அதன் அடிப்படையில் வயது வந்தோருக்கு 1,000 அமெரிக்க டாலர் மற்றும் ஒரு குழந்தைக்கு 500 அமெரிக்க டாலர் வழங்கப்படும். இதனை அரசாங்கம் அவர்கள் வங்கிக் கணக்கில் செலுத்தும். இதற்காக 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் ஒதுக்கப்பட்டுள்ளது.

இது தவிர இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான பணிகளுக்கு மட்டும் 500 பில்லியன் அமெரிக்க டாலர் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு 3,000 அமெரிக்க டாலர் அனுப்பி வைக்கப்படும். இதற்கான மசோதாவை நாடாளுமன்றம் நிறைவேற்றியவுடன், மூன்று வாரங்களில் இது வழங்கப்படும்.

தற்போது அதிபர் ட்ரம்ப், அவசர நிலையை அறிவித்துள்ளதால் அடுத்தகட்டமாக 3,000 அமெரிக்க டாலர்களை தனியே வழங்குவோம். ஆகவே, கடின உழைப்பாளிகளான அமெரிக்கர்களுக்கு எந்த சிரமமும் இன்றி வீட்டிலேயே பணம் கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது.

நிர்வாகம் இதற்காக ஒரு டிரில்லியன் டாலர் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்தத் தொகுப்பிலிருந்து சிறு வணிகங்களுக்கான நெருக்கடியைப் போக்க 300 பில்லியன் வழங்கப்படும். அந்தப் பணம், மக்களை வேலைக்கு அமர்த்தவும், மக்களை ஊதியத்தில் வைத்திருக்கவுமான தேவைகளைப் பொருட்டு வழங்கப்படுகிறது. நிறுவனங்கள் இதைச் செய்தால், அதன் பின்னர் கடன் மன்னிப்பு (loan forgiveness) வழங்கப்படும்.

மக்களுக்கு உதவி செய்ய எங்களுக்குத் தயக்கமில்லை. பொருளாதாரம் தாராளமாக இருக்கிறது''.

இவ்வாறு ஸ்டீவன் முனுச்சின் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x