Published : 20 Mar 2020 03:58 PM
Last Updated : 20 Mar 2020 03:58 PM

தமிழகத்தில் ஏப்.21-ம் தேதி வரை போராட்டங்கள், பேரணிக்கு அனுமதி அளிக்கக் கூடாது: தமிழக அரசு, காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப் படம்.

சென்னை

தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 21 ஆம் தேதி வரை போராட்டங்கள், பேரணிக்கு அனுமதி அளிக்கக் கூடாது என தமிழக அரசு, காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்தும், ஆதரித்தும் தமிழகத்தின் பல பகுதிகளில் நடைபெறும் போராட்டங்களால் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாகவும், காவல்துறை அனுமதியில்லாமல் போராடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் இன்று (மார்ச் 20) நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது போராட்டத்திற்கு ஆதரவாக மனுத்தாக்கல் செய்திருந்த வழக்கறிஞர்கள், ஜனநாயக அமைப்பில் போராட்டம் என்பது அடிப்படை உரிமை என வாதிட்டனர்.

அப்போது இந்த வழக்கில் காவல்துறை தரப்பில் ஆஜராகியிருந்த தமிழக அரசின் தலைமைக் குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜனிடம் போராட்டத்தின் தற்போதைய நிலை என்ன என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதில் அளித்த குற்றவியல் தலைமை வழக்கறிஞர், பெரும்பாலான இடங்களில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் தமிழகத்தின் சில பகுதிகளில் இன்னும் போராட்டம் தொடர்வதாகவும் தெரிவித்தார்.

அப்போது நீதிபதிகள், தற்போது கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க பொது இடங்களில் மக்கள் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு, மாநில அரசுகள் பொதுமக்களுக்குக் கேட்டுக்கொண்டுள்ளன. எனவே, இதனை அனைவரும் உரிய முறையில் கடைப்பிடிக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.

தற்போதைய நிலையில், கரோனா பரவுவதைத் தடுக்க பொது இடங்களில் அதிக அளவில் கூடி ஆர்ப்பாட்டம், போராட்டம் உள்ளிட்டவற்றுக்கு காவல்துறை, தமிழக அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஏப்ரல் மாதம் 21 ஆம் தேதிக்குத் தள்ளி வைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x