ஊழியர்களுக்காக ‘வீட்டிலிருந்து வேலை’ கொள்கையை அமல்படுத்துங்கள்: நிறுவனங்களிடம் மத்திய அரசு அறிவுறுத்தல்

பிரதிநிதித்துவப் படம்.
பிரதிநிதித்துவப் படம்.
Updated on
1 min read

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் தங்களிடம் பணியாற்றும் ஊழியர்களிடம் ‘வீட்டிலிருந்து வேலை’ கொள்கையை அமல்படுத்தும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். பல்வேறு மாநிலங்களிலும் இதுவரை 170 க்கும் மேற்பட்டோர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவுவதைத் தடுக்க "சமூக இடைவெளியை" ஊக்குவிப்பதன் ஒரு பகுதியாக தங்கள் ஊழியர்களுக்காக ‘வீட்டிலிருந்து வேலை’ கொள்கையை அமல்படுத்துமாறு நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

ஏற்கெனவே, இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் ஜூன் 30-ம் தேதி வரை, தங்கள் குழுக் கூட்டங்களை வீடியோ, ஆடியோ காட்சி வழிமுறைகளில் நடத்த மத்திய கார்ப்பரேட் விவகார அமைச்சம் அனுமதி வழங்கியிருந்தது.

இதுகுறித்து மத்­திய நிறு­வன விவ­கா­ரங்­கள் துறை செய­லர் இன்ஜெட்டி சீனிவாஸ் கூறியுள்ளதாவது:

''இந்தியாவில் கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக மார்ச் 31 ஆம் தேதி வரை தற்காலிக நடவடிக்கையாக ‘வீட்டிலிருந்து வேலை’ கொள்கையை அமல்படுத்த உடனடி திட்டத்தை அமல்படுத்துமாறு நிறுவனங்களுக்கு கடுமையாக அறிவுறுத்தப்படுகிறது.

இதற்காக அமைச்சகத்தின் வலைதளங்களில் கரோனா வைரஸ் அச்சுறுத்தலைச் சமாளிக்க தங்கள் தயார் நிலையை உறுதிப்படுத்த நிறுவனங்கள் / எல்.எல்.பிக்களுக்கான வலை படிவத்துடன் வெளியாகியுள்ளன. அதில் நிறுவனங்கள் முறையாக அனைத்து விவரங்களையும் பதிவு செய்து அனுப்ப வேண்டும்.

இது ‘வீட்டிலிருந்து வேலை’ கொள்கையைப் பின்பற்றும் நிறுவனங்கள் மற்றும் எல்.எல்.பி.க்களின் விவரங்களைச் சேகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

நிறுவனங்கள் / எல்.எல்.பிக்கள் (வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டாண்மை) முக்கிய முதலாளிகள், குறிப்பாக நகர்ப்புறங்களில், நோய் காரணமாக பரவுதல், நோயுற்ற தன்மை மற்றும் இறப்பு ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு வழியாக சமூக இடைவெளியின் நோக்கத்தை முழுமையாக உணர அவர்களின் முழு பங்கேற்பும் ஒத்துழைப்பும் மிக அவசியம்,

அனைத்து நிறுவனங்களும் / எல்.எல்.பிகளும் (கூட்டாண்மை நிறுவனங்கள்) தங்கள் தலைமையகம் மற்றும் கள அலுவலகங்களில் ‘வீட்டிலிருந்து வேலை’ கொள்கையை வீடியோ அல்லது பிற மின்னணு / தொலைபேசி / கணினிமயமாக்கப்பட்ட வழிமுறைகள் மூலம் கூட்டங்களை நடத்துவது உட்பட முடிந்தவரை அதிகபட்சமாக செயல்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள்,

கடமையில் அத்தியாவசிய ஊழியர்களுடன் கூட, நேரடித் தொடர்புகளை குறைக்க ஷிப்ட் முறையில் பணிகளுக்கான நேரங்கள் பின்பற்றப்படலாம்.

கோவிட்-19 ஐ முன்னிட்டு நிறுவன உறுதிமொழி) என்ற வலைப் படிவம், அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் எல்.எல்.பி-களின் அங்கீகரிக்கப்பட்ட கையொப்பமிட்டவரால் தாக்கல் செய்யப்பட வேண்டும்,

மேலும் அனைத்து நிறுவனங்களும் / எல்.எல்.பிகளும் மார்ச் 23 அன்று ஒரே நாளில் மத்திய அரசின் கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தின் இதற்கான வலைதள சேவையைப் பயன்படுத்தி தங்கள் ஒத்துழைப்பு குறித்த விரிவான அறிக்கையை வழங்கும்படி கோரப்படுகின்றன''.

இவ்வாறு இன்ஜெட்டி சீனிவாஸ் அறிவுறுத்தியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in