

வரும் 22-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு மேல் பால் விற்பனை இல்லை என்று தனியார் பால் முகவர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவிலும் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை இந்தியாவில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 196 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே கரோனா வைரஸைத் தடுக்க எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை தொடர்பாக நாட்டு மக்களிடம் பேசிய பிரதமர் மோடி, 22-ம் தேதி காலை 7 மணியிலிருந்து இரவு 9 மணி வரை நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஊரடங்கு உத்தரவுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அத்தியாவசியத் தேவைகளைத் தவிர மற்ற எதற்கும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்.
அடுத்து வரும் வாரங்களில் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு அவசியம் ஏற்பட்டால் மட்டும் செல்லுங்கள். இல்லாவிட்டால் செல்ல வேண்டாம். நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்ட மக்கள் அடுத்த சில வாரங்களுக்கு வீட்டுக்குள்ளேயே இருங்கள் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் பிரதமர் மோடி பேசியதற்கு தனியார் பால் முகவர்கள் தொழிலாளர் நலச் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அச்சங்கத்தின் நிறுவனரும் மாநிலத் தலைவருமான சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''பிரதமரின் அறிவிப்பை ஏற்று, சுய ஊரடங்கை மேற்கொள்ள நாங்களும் முடிவெடுத்துள்ளோம்.
ஞாயிற்றுக்கிழமை (22-ம் தேதி) காலை 7 மணிக்கு மேல் பால் விற்பனை செய்ய மாட்டோம். கரோனா பாதிப்பைத் தடுக்க எங்களால் ஆன ஒத்துழைப்பை அளிப்போம்.
எனினும் சனிக்கிழமையன்று (21-ம் தேதி) காலை, மாலை இரு வேளைகளிலும் கூடுதலாகப் பால் கொள்முதல் செய்து விற்பனை செய்வோம்'' என்று தெரிவித்துள்ளார்.