Published : 20 Mar 2020 09:23 AM
Last Updated : 20 Mar 2020 09:23 AM

கரோனா அச்சம்: சென்னையில் தங்கும் விடுதிகள் மூடப்படுமா? - மாநகராட்சி ஆணையர் பதில்

தேவை ஏற்பட்டால் விடுதிகளை மூட சென்னை மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிடும் என, மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஏற்கெனவே கரோனா வைரஸ் தொற்று 3 பேருக்கு உறுதியாகியுள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், வணிக வளாகங்கள், திரையரங்குகள், சுற்றுலாத் தலங்கள், பெரிய கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் மூடப்பட்டுள்ளன.

அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைகள் தொடர்ந்து இயங்கும் எனவும்,தேவையற்ற வதந்திகளைப் பரப்பக் கூடாது எனவும் ஏற்கெனவே சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், "கை கழுவப் பயன்படுத்தப்படும் கிருமிநாசினிகளுக்கு திடீரென தேவை அதிகரித்துவிட்டதால், அது நிறைய இடங்களில் கிடைப்பதில்லை. அதனால், வீட்டில் சாதாரணமாகப் பயன்படுத்தப்படும் சோப்பைப் பயன்படுத்துவதும் கிருமிநாசினியைப் பயன்படுத்துவதற்கு இணையான பலனைத் தரும். சோப்பைத் தகுந்த முறையில் பயன்படுத்தினாலே கிருமிகளில் இருந்து மக்கள் தங்களைக் காத்துக்கொள்ளலாம்" எனத் தெரிவித்தார்.

சென்னையில் தங்கும் விடுதிகள் மூடப்படுமா என்ற செய்தியாளர் கேள்விக்கு, "அனைத்து விடுதிகளையும் மூடி இயல்பு வாழ்க்கையை பாதிப்புக்கு உள்ளாக்க முடியாது. படிப்படியாகத்தான் அதனைச் செயல்படுத்த முடியும். நோய்த்தொற்று பரவுவதற்கு உண்டான வாய்ப்புகள் உள்ள இடங்களைத் தொடர்ந்து அதிகாரிகளும், மருத்துவர்களும் ஆய்வு செய்துகொண்டிருக்கின்றனர். தேவை ஏற்படின் விடுதிகளை மூடவும் மாநகராட்சி நிர்வாகம் தயாராக இருக்கிறது" என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x