Published : 18 Mar 2020 01:06 PM
Last Updated : 18 Mar 2020 01:06 PM

உலகம் முழுதும் கரோனா வைரஸ் தாக்கம் : லேட்டஸ்ட் அப்டேட்ஸ்- முக்கியமான தகவல்கள்

உலகம் முழுதும் சீனாவை அடுத்து கரோனா தொற்று பரவல் அதிகமாகியுள்ளதையடுத்து பலநாடுகளும் பலக் கட்டுப்பாடுகளையும் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றன.

இது தொடர்பான 50 லேட்டஸ்ட் தகவல்கள்:

மரணங்கள், தொற்றுக்கள்:

உலகம் நெடுக கரோனா தொற்றுக்கு இதுவரை 1,96,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா பலி எண்ணிக்கை 7,800-ஐ கடந்துள்ளது.

அமெரிக்காஸ்:

அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களில் மூச்சுக்குழல் நோய் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது, மொத்தம் அமெரிக்காவில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,400-ஐக் கடந்து விட்டது. கெண்டகி, இல்லினாய்ஸில் முதல் கரோனா பலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கரோனா பலி எண்ணிக்கை அமெரிக்காவில் 108 ஆக அதிகரித்துள்ளது.

அதிபர் ட்ரம்ப் கரோனா பாதிப்புக்காக 1 ட்ரில்லியன் டாலர்கள் தொகை ஒதுக்குவதாக அறிவித்துள்ளார், இதில் பாதிக்கப்பட்ட தனிப்பட்ட அமெரிக்கர்களுக்கு நேரடியாக 1000 டாலர்கள் வழங்குவதும் அடங்கும்.

கரோனா வைரஸ் நோயாளிகளுக்கு நிதி உதவி அளிப்பதாக கனடா அரசும் உறுதி அளித்துள்ளது.

பிரேசிலில் முதல் கரோனா வைரஸ் பலி ஏற்பட்டுள்ளது. மேலும் ஆபத்தான் நிலையில் இருக்கும் நால்வருக்கு பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன.

மெக்சிகோவின் உச்ச நீதிமன்றம் மார்ச் 18 முதல் ஏப்ரல் 19 வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிலே நாட்டில் புதிய அரசியல் சாசனத்துக்கான வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பா:

கரோனா வைரஸ், ‘சமூக-பொருளாதார சுனாமி’யை ஏற்படுத்தியுள்ளதாக இத்தாலி பிரதமர் கவலை வெளியிட்டுள்ளார், எல்லைகளை மூட ஐரோப்பிய தலைவர்கள் ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் இத்தாலியில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 345 ஆக அதிகரிக்க மொத்த பலி எண்ணிக்கை 2503 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27,980லிருந்து 12.6% அதிகரித்து தற்போது 31,506 ஆக அதிகரித்துள்ளது.

பிரான்ஸ் 67 மில்லியன் மக்களையும் லாக் டவுனில் வைத்துள்ளது. மேலும் நிதிநெருக்கடியில் இருக்கும் நிறுவனங்களை தேசிய மயமாக்கம் செய்வோம் என்று பிரான்ஸ் அறிவித்துள்ளது.

பிரான்சில் கரோனா பலி 148 ஆக அதிகரித்துள்ளது. 6,600க்கும் அதிகமானோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெல்ஜியம் நாடு கரோனா அச்சுறுத்தலில் இன்று மாலை முதல் லாக்-டவுன் செய்து ஏப்ரல் 5ம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.

பாதிக்கப்படும் நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்களுக்காக ஸ்பெயின் 200 பில்லியன் யூரோக்கள் உதவி அறிவித்துள்ளது.

உலகம் முழுதும் ஆங்காங்கே தேங்கியிருக்கும் ஜெர்மனி பயணிகளை மீட்க ஜெர்மனி 50 மில்லியன் யூரோக்கள் ஒதுக்கியுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஸ்பெயினிலிருந்து வந்த 2 பெண்களுக்கு கரோனா தொற்று இருப்பதை மாண்ட்டிநெக்ரோ உறுதி செய்துள்ளது.

துருக்கியில் முதல் கரோனா பலி ஏற்பட்டுள்ளது, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இரட்டிப்பாகி 98 ஆக அதிகரித்துள்ளது.

சீனா மற்றும் பிற ஆசிய நாடுகள்:

சீனாவில் மேலும் 13 கரோனா தொற்று நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து கரோனா மையமான சீனாவில் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 80, 894 ஆக உள்ளது.

சீனாவில் பலி எண்ணிக்கை 11 புதிய மரணங்களுடன் 3,237 ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவுக்காக சீனா தயாரித்துள்ள புதிய கரோனா வைரஸ் தடுப்பு வாக்சைனின் கிளினிக்கல் சோதனைகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

கரோனா லாக் டவுன் அச்சத்தில் பதற்றமாக மக்கள் பொருட்களை வாங்கிக் குவிப்பதைத் தடுக்க இந்தோனேசியா போலீஸ் கட்டுப்பாடுகள விதித்துள்ளது. மேலும் கச்ச எண்ணெய் விலைக்குறைவினால் பெட்ரோல், டீசல் விலையினைக் குறைக்க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது.

தென் கொரியாவில் 84 புதிய கரோனா தொற்று நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 8,320 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இருவர் பலியாக சாவு எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளது.

கஜகஸ்தானில் 14 பேர் புதிதாக கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது.

மங்கோலியாவில் தென் கொரியா, ஜெர்மனியிலிருந்து கொண்டு வரப்பட்ட குடிமக்களில் 3 பேருக்கு கரோனா இருப்பதை உறுதி செய்துள்ளது.

தாய்லாந்து நாடு உலகின் மிகப்பெரிய சுற்றுலாப்பிரதேசமாகும் ஆனால் கரோனா அச்சுறுத்தலில் அங்கு மதுபான விடுதிகள், தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள் , காக்ஃபைட்டிங் கிளப்புகள் ஆகியவை மூடப்பட்டுள்ளன. அடுத்த மாத தாய்லாந்து புத்தாண்டு கொண்டாட்டங்களையும் ஒத்தி வைத்துள்ளது.

கம்போடியாவில் 12 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதோடு பாதிப்பு எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது.

அயல்நாட்டினருக்கு புதிய விசாக்களை ரத்து செய்தது வியட்நாம்.

மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா:

சவுதி அரேபியாவின் மசூதிக்கள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன, வழக்கமான தொழுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஈரானில் கரோனா பலி எண்ணிக்கை 988 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 135 பேர் மேலும் பலியாகியுள்ளனர், 1178 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதிய கேஸ்களாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

எகிப்தில் மேலும் 2 பேர் கரோனாவுக்குப் பலியாகியுள்ளனர். இதன் மூலம் 6 பேர் இதுவரை கரோனாவுக்குப் பலியாகியுள்ளனர்.

பொருளாதார வீழ்ச்சிகள்:

புதனன்று அமெரிக்க பங்கு உத்தேச வர்த்தகம் கடுமையாகச் சரிய பல ஆசியப்பங்குகளும் சரிவு கண்டுள்ளன.

போயிங் மற்றும் பிற அமெரிக்க விமான நிறுவனங்கள் தேவை குறைந்து போனதால் தங்களுக்கு பில்லியன்கள் டாலர்கள் கணக்கில் உதவி வேண்டும் என்று கோரியுள்ளனர்.

கரோனா வைரஸ் பரவலினால் ஜப்பானின் உள்ள பாதி நிறுவனங்களின் உற்பத்தி, விற்பனை சரிவு கண்டுள்ளது.

மலேசிய அரசின் உத்தரவான அத்தியாவசியமில்லாத பொருட்களை உற்பத்தி செய்யவேண்டாம் என்பதற்கேற்ப கரோனா அச்சுறுத்தல் காரணமாக பாமாயில் தோட்டங்களில் எந்த ஒரு நடவடிக்கையும் கூடாது என்று நிறுத்த உத்தரவு பிறப்பித்துள்ளது, இதனால் பாமாயில் தட்டுப்பாடு ஏற்படலாம்.

கரோனா வைரஸ் பாதிப்பினால் சீனாவின் முதல் காலாண்டு பொருளாதாரம் 9% சரிவு காணும் என்று கோல்ட்மான் சாக்ஸ் கூறியுள்ளது.

பலதரப்பட்ட திவால்களைத் தடுக்க ஐரோப்பிய ஏர்லைன்ஸ் அவசர வரிச்சலுகை கோரியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x