Published : 18 Mar 2020 12:00 PM
Last Updated : 18 Mar 2020 12:00 PM

முகக்கவசம், கிருமி நாசினியை அதிக விலைக்கு விற்பனை செய்வதைத் தடுக்க கோரிய வழக்கு; தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தேவையான முகக்கவசங்கள் மற்றும் கிருமி நாசினி ஆகியவற்றை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில், முகக்கவசங்கள், கிருமி நாசினி ஆகியவற்றை அத்தியாவசிய பொருட்களாக அறிவித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த பொருட்கள் போதுமான அளவில் கிடைப்பதை உறுதி செய்யவும், அவை பதுக்கி வைக்கப்படுவதையும், அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதையும் தடுக்க நடவடிக்கை எடுக்க, அனைத்து மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்கள் அனுப்பியுள்ளது.

இதன் அடிப்படையில் பிற மாநில அரசுகள் உத்தரவுகளை பிறப்பித்த போதும், தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், அத்தியாவசியப் பொருட்களாக அறிவிக்கப்பட்டுள்ள முகக்கவசம், கிருமி நாசினியை பதுக்கி, அதிக விலைக்கு விற்பனை செய்வது ஏழு ஆண்டுகள் தண்டனை விதிக்கத்தக்க குற்றமாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

சென்னையில் முகக்கவசங்கள், கிருமி நாசினி கிடைக்காத நிலை உள்ளதால், மாநில அரசு எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பலனளிக்காது என மனுவில் கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசின் அறிவிப்பை ஏற்று தமிழக அரசு தகுந்த உத்தரவு பிறப்பிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மனுவை இன்று (மார்ச் 18) விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு, இதுசம்பந்தமாக தமிழக அரசு மார்ச் 20-ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x