Published : 17 Mar 2020 07:42 PM
Last Updated : 17 Mar 2020 07:42 PM

கரோனா அச்சம் வேண்டாம்; அனைத்து துறைச் செயலர்கள் தலைமையில் சிறப்பு பணிக்குழு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

கரோனா குறித்து ஸ்டாலின் பேசியதற்கு பதிலளித்த முதல்வர் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. சட்டப்பேரவையை ஒத்திவைக்கத் தேவையில்லை. அனைத்து துறைச் செயலர்கள் அடங்கிய வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

இதுகுறித்து முதல்வர் சட்டப்பேரவையில் பேசியதாவது:

“கரோனா வைரஸ் பற்றி இங்கே சொன்னார்கள். நேற்றைய தினம்தான், எதிர்க்கட்சி துணைத் தலைவர் கரோனா வைரஸ் பற்றி குறிப்பிட்டார். அதைத் தொடர்ந்து மாலையிலேயே, கரோனா வைரஸ் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விளக்கமாக அதைத் தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் இதைப் பற்றி தெரிவித்தார். அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை.

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையிலே அரசு முழு மூச்சோடு ஈடுபட்டு வருகிறது. ஆகவே, என்னென்ன தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமோ அத்தனை தடுப்பு நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு இருக்கிறது. அதைத்தான் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் தெளிவாகச் சொன்னார். அச்சப்பட வேண்டிய அவசியமே இல்லை. தமிழ்நாட்டில் ஒருவர்தான் பாதிக்கப்பட்டுள்ளார்.

கிட்டத்தட்ட 8 கோடி பேர் தமிழகத்தில் இருக்கின்றோம். இன்னும் சொல்லப்போனால், அனைவருமே மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்கள். நானும் மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்திருக்கின்றேன். நீங்களும் அடிக்கடி மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்து கொண்டு இருக்கிறீர்கள். நோய் வருவது இயற்கை. அதை யாராலும் தடுக்க முடியாது.

ஏதோ ஒரு ரூபத்தில் அவ்வப்போது அனைவருக்கும் நோய் வரும். ஆனால் இந்த நோயைப் பொறுத்தவரைக்கும், இந்த கரோனா வைரஸ் ஒரு அபாயகரமான நோய் என்று உலக நாடுகளிலிருந்து செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன. கிட்டத்தட்ட 136 நாடுகளில் பரவி இருப்பதாக செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன. ஆகவே இதை வைத்துதான் அச்சப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவரும், எதிர்க்கட்சி துணைத் தலைவரும் இந்த அவையிலே தெரிவித்தார்கள்.

அதற்குண்டான முழு விளக்கத்தையும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அரசு எந்தெந்த வகையிலே தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது என்ற முழு விவரங்களையும் தெரிவித்தார். ஆகவே, இதில் அச்சப்பட வேண்டிய தேவையே இல்லை. ஆகவே, சட்டப்பேரவையை ஒத்திவைக்க வேண்டிய அவசியம் இல்லை.

அனைத்து உறுப்பினர்களுக்கும் முழு பாதுகாப்பு வழங்கப்படும். உங்களுக்குப் பரிசோதனை வேண்டுமென்றால், உங்களைப் பரிசோதிப்பதற்கும், மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கும் அரசு தயாராக இருக்கின்றது. அதுமட்டுமல்ல, நாம் சட்டப்பேரவைக்கு உள்ளே வருகின்ற போது கூட, அனைவரையும் பரிசோதனை செய்துதான் அனுப்புகிறார்கள் என்பதையும் இந்த அவைக்குத் தெரிவிக்க விரும்புகின்றேன்.

கரோனா வைரஸ் நோய் குறித்து என்னுடைய தலைமையில், மூத்த அமைச்சர்கள், அரசுத் துறை செயலாளர்கள், ரயில்வே துறை, விமானப் போக்குவரத்துத் துறை உள்ளிட்ட பல்வேறு துறை வல்லுநர்களைக் கொண்டு அவ்வப்போது கூட்டம் நடத்தப்பட்டு, அறிவுரைகள் வழங்கப்படுகின்றன. நோய் தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து தகுந்த ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன.

கரோனா வைரஸ் நோய் குறித்து மத்திய அரசால் அளிக்கப்படும் அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் பரிசீலித்து தமிழக அரசால் தொடர்ந்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கரோனா வைரஸ் நோய் தொடர்பான நடவடிக்கைகளை தீவிரமாகக் கண்காணிக்க, அரசு தலைமைச் செயலாளர் தலைமையில் அலுவல் மற்றும் அலுவல் சாரா உறுப்பினர்களைக் கொண்ட சிறப்பு பணிக் குழு ((Task Force) ஒன்றை அமைக்க உத்தரவிட்டுள்ளேன்.

இந்தக் குழுவில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் அரசு செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றம் குடிநீர் வழங்கல் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், தகவல் தொழில்நுட்ப துறையின் அரசு முதன்மைச் செயலாளர், தொழில் துறையின் அரசு முதன்மைச் செயலாளர், போக்குவரத்து துறையின் அரசு முதன்மைச் செயலாளர், வருவாய் நிர்வாக ஆணையர், காவல்துறை தலைமை இயக்குநர், மருத்துவக் கல்வி இயக்குநர், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறையின் இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர், தென்னக ரயில்வே பொது மேலாளர், சென்னை விமான நிலைய இயக்குநர், சென்னை துறைமுக பொறுப்பு கழகத்தின் தலைவர், பொது சுகாதாரத் துறையின் சார்பாக ஒரு வல்லுநர், தனியார் துறை சார்பாக ஒரு வல்லுநர் கொண்ட குழுவினை அமைக்க உத்தரவிட்டுள்ளேன்.

இச்சிறப்பு பணிக்குழு, அவ்வப்போது சந்தித்து, அரசு வழங்கும் உத்தரவுகளை சரியான முறையில் அமல்படுத்தப்படுகின்றதா என்பதை தீவிரமாக கண்காணித்து, கரோனா வைரஸ் நோய்த் தொற்றினை தமிழ்நாட்டில் முழுமையாகத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவும், அரசுக்கு உரிய அறிவுரைகளை வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்”.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x